தமிழக முதல்வரே உங்கள்... சகோதரிகளை காப்பாற்றுங்கள்....

Women Requested CM Action மைக்ரோ பைனான்ஸ்களின் பிடியில் இருந்து தமிழக பெண்களை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-02-15 08:51 GMT

மகளிர் சுயஉதவிக்குழு பெண்களிடம்  உரையாற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் (கோப்பு படம்)

Women Requested CM Action

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவை தொடங்கியவர் முன்னாள் முதல்வரும், கலைஞர் என தமிழர்களால் போற்றப்படுபவருமான கருணாநிதி தான். அவரே பல மகளிர் குழுக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் தேவைகளை புரிந்து கொண்டு தீர்த்து வைத்தார். அதன் பின்னர் மகளிர் குழுக்கள் மளமளவென வளர்ச்சி அடைந்து இன்று பல லட்சம் குழுக்கள் தமிழகத்தில் உருவாகி விட்டன. கோடியை தாண்டிய எண்ணிக்கையிலான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமும், கூட்டுறவு வங்கிகள் மூலமும் மகளிர் குழுக்களுக்கு கடன்களை வழங்குகின்றன. ஆனால் இந்த கடன்களை வாங்கும் பெண்கள், தங்களது இதர கடன்களை அடைப்பதற்கும், சிறிய அளவிலான தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர். முறையாக தொழில் செய்வதில்லை. காரணம் இப்போதைய மார்க்கெட்டிங் சூழலில் எந்தெந்த தொழில் செய்யலாம், அதற்குறிய வழிமுறைகள் என்ன என்பதை முறையாக அரசு செய்யவில்லை. இந்த குழுக்களுக்கு பயிற்சியும் தருவதில்லை.

Women Requested CM Action


மகளிர் சுயஉதவிக்குழுவினர் அளிக்கும் வரவேற்பை ஏற்கும் தமிழக முதல்வர் (கோப்பு படம்)

இதனால் சிறிய கடன்களை அடைத்து விட்டு, சிறிய அளவிலான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பெண்கள் மொத்த கடனில் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் அடுத்தடுத்து கடன் கொடுக்க முடியாது என்ற நிலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் கை விரிக்கின்றன. (இது தான் ரூல்ஸ் கூட. ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்காமல் புதிய கடன் தர மாட்டார்கள்). சூழலைப் பயன்படுத்தி மைக்ரோ பைனான்ஸ்கள் மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுத்து அவர்களை மேலும் பல சிக்கல்களில் மாட்டி விட்டு விட்டனர். ஆமாம் மைக்ரோ பைனான்ஸ்கள் கொடுத்த கடனுக்கு வட்டி அதிகம். அங்கு கடன் வாங்கினால் வட்டி மட்டும் தான் கட்ட முடியும். கடனை அடைக்க முடியாது.

இப்படி அடுத்தடுத்து சிக்கல்களில் மாட்டிக்கிடக்கும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் உள்ளனர். உண்மையில் இப்படி மைக்ரோ பைனான்ஸ்களிடம் கடன் வாங்கி தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை கோடிகளை கூட தாண்டும். தமிழக முதல்வரே உங்கள் தந்தை தமிழக பெண்களுக்கு கொடுத்த வாய்ப்பினை நீங்கள் பலப்படுத்தி தர வேண்டும்.

மைக்ரோ பைனான்ஸ்களிடம் இருந்து பெண்களை மீட்டு, அவர்களுக்கு மாவட்டந்தோறும் பெண்கள் தொழிற்பூங்கா அமைத்து, இடம் வழங்கி, மானிய விலையில் மின்சாரம் வழங்கி, தொழில் தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் என்ற வகையில் வழிகாட்ட வேண்டும். நீங்கள் மாதந்தோறும் தரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை விட இந்த நடவடிக்கை பல மடங்கு பெண்களின் வாழ்விற்கும், பாதுகாப்பிற்கும் பலனளிக்கும். தமிழகத்தில் வாழும் உங்கள் சகோதரிகளை காப்பாற்ற இதனை செய்வீர்களா முதல்வரே... தேர்தல் அறிக்கையிலாவது இது பற்றிய விஷயங்களை சேருங்கள்... சட்டசபை கூட்டத்தொடரில் கூட அறிவித்தால் வரவேற்க தயாராக தமிழக பெண்கள் உள்ளனர்.

Tags:    

Similar News