பச்சை பாலை ஒழித்து கட்டியது ஏன் அண்ணாமலை கேள்வி

40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது

Update: 2023-11-21 01:30 GMT

பாஜக தலைவர் அண்ணாமலை (பைல் படம்)

40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.

ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில், மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம்.

இவ்வாறு கொழுப்புச் சத்துகளை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த திமுக அரசு.மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொது மக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News