இரண்டு டிஎம்சி தண்ணீரை இழந்தோம்... நீடிக்கும் பெரியாறு பெருந்துயரம்

History of Mullaperiyar Dam - பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு 2 டி.எம்.சி.தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

Update: 2022-08-13 05:45 GMT

முல்லைப்பெரியாறு அணை (பைல் படம்)

History of Mullaperiyar Dam - முல்லைப் பெரியாறு அணை நம்பி இருப்பது தென்மேற்கு பருவ மழையை மட்டும்தான். அந்த மழைக் காலத்தில் சேகரிக்கப்படும் நீரைத்தான் கிட்டத்தட்ட 10 லட்சம் விவசாயிகளும், 95 லட்சம் மக்களும் முறையே விவசாயத்திற்காகவும், குடிநீர் ஆதாரமாகவும் பயன்படுத்தி வருகிறோம்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெரிய அளவிற்கு பாதிப்பு எதையும் உருவாக்காது கிட்டத்தட்ட 126 ஆண்டுகளாக ஐந்து மாவட்ட மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது எங்கள் பெருமைமிக்க முல்லைப் பெரியாறு அணை. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரளாவில் ஏற்பட்ட பெரு மழை வெள்ளத்தின் போது,  கேரளா மாநிலத்தவர் செய்த முழுத்தவறையும்,முல்லைப் பெரியாற்றின் மீது தூக்கிப் போட்டு, 126 ஆண்டுகால தங்கு தடையற்ற பெரியாற்றின் பயணத்தை கேள்விக்குள்ளாக்கினார்கள்.

வாய் இருந்தும் ஊமைகளாய் நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அளவிற்கு, பெரியாற்றின் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டது. எந்தப் பெரியாற்றுக்குச் சொந்தக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோ, அதே பெரியாற்றுக்குச் சொந்தக்காரர்கள் தான், பாதிக்கப்பட்ட கேரள மக்களை வெள்ள சேதத்தில் இருந்து மீட்பதற்காக 440 கோடி ரூபாய் நிவாரண பொருட்களை அள்ளி அள்ளி வழங்கினார்கள். .2014 ஆம் ஆண்டு வரை எங்கள் முல்லைப் பெரியாற்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த உச்சநீதிமன்றமும், கடந்த 2018 ஆம் ஆண்டு எங்களை கைவிட்டது. ஒருவேளை பெரியாறு அணை ஆபத்து மிகுந்ததோ என்கிற அச்சத்தில் தனிநபர்களின் தனித்தனி வழக்குகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டது.

2020 இல் நிலைமை மாறியது. புதிய அணை கேட்டு 42 ஆண்டுகளாக தலைகீழாய் நின்று தண்ணி குடித்த கேரள மாநிலத்துக்கு , நேராக நின்று தண்ணீர் குடிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்.புதிய அணைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை அனுமதித்து, முல்லைப் பெரியாறு அணை மீது தான் 2014 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை அதுவே கேள்விக்குள்ளாக்கியது.

1979 ல் 152 ஐ 136 ஆக மாற்றினாய்...35 ஆண்டுகள் கழித்து லேசாய் மூச்சுவிட்டு 136 ஐ 142 ஆக மாற்றினோம்...இப்போது அதிலும் மண்ணள்ளி போடுகிறது கேரளம் .  ஏறத்தாழ  இரண்டு டி எம் சி க்கு மேற்பட்ட தண்ணீரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வயிற்றில்  அடித்த செயலாகவே பார்க்கிறோம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News