மருத்துவக் குணம் கொண்ட வில்வம் மரத்தின் தனிச்சிறப்புகள்.. அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்...

Vilva Maram in Tamil-மருத்துவக் குணம், தெய்வீகத்தன்மை கொண்ட வில்வம் மரத்தின் பல்வேறு தனிச்சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்.;

Update: 2023-01-13 03:50 GMT

மருத்துவக் குணம் கொண்ட வில்வம் மரம்.

Vilva Maram in Tamil-வில்வம்: இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வமரத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இந்த மரம் 15 அடி முதல் 25 அடி வரை வளரும். இந்த மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். ஐந்து கூட்டிலைகளைக் கொண்ட மரத்தை மகாவில்வம் என்பர். ஆனால், மகாவில்வம் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.

வில்வப்பழங்கள் கோடைக்காலத்தில் பழுக்கும் தன்மை கொண்டது. அதன் தோல் பகுதி வழவழப்பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். வில்வம்காய் பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பானதாகவும் மாறிவிடும். கோடைக்கால துவக்கத்தின் போது மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். நாளடைவில் பச்சை நிறமாக மாறிவிடும்.

வில்வம் வேறு பெயர்கள்:

வில்வமானது கூவிளம், சரபீதலம், அலுவீகம், அல்லூரம், ஆலூகம், சட்டாம், சிறிய பலகியம், திரிபத்ர, பில்வம், பூவிதாத, சலய, மாங்கல்ய, சாண்டல்லியம், கற்கடக நிலை மல்லிகம், குசாபி, வில்வை போன்ற பல பெயர்களால் அழைக்கபடுகிறது.

பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே, சிவபெருமானின் தல விருட்சம் ஆகும். இந்த விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும், நன்மைகளும் அடைவார்கள்.

வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள், புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் (திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.

வில்வத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?:

வில்வ இலையை பறிக்கும் போது வில்வமரத்திடம் அனுமதி பெறுவதாக மனதில் எண்ணிக்கொண்டு போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என பிரார்த்தனை செய்த பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

வில்வத்தின் மருத்துவ பயன்கள்:

மாரடைப்பை தடுக்கும். வில்வப்பழம் இதயத்திற்கு வலு சேர்க்கிறது. வில்வப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வில்வப்பழம் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும். பலவித பிரச்சனைகளை தீர்க்கும். வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருந்தாகும்.


வில்வ பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். தாய்மார்களுக்கு தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும். சிறுநீரக கற்களைக் கரைக்கும். இதை ஊறுகாய் போல போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். உடல் உறுப்புக்கள் சக்தி பெறும். உலரவைத்த வில்வப்பழம் ஒரு 5 கிராம் அளவுள்ள ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளும் சக்தி அடையும்.

பித்த நோய்களை குணமாக்கும், வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியைப் போக்கும். எல்லாவிதமான மேக நோய்க்கும் வில்வம் அரும் மருந்தாக உள்ளது. எல்லா விதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழம் பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. வில்வத்தின் இளம் தளிர் இலைகளை லேசாக வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கக் கண்வலி, கண் சிவப்பு, அரிப்பு என அனைத்தும் குணமாகும்.

வில்வ இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானம் சீராகும். உணவில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் கலந்து உடல் வலுப்பெறும். மஞ்சள் காமாலையை குணமாக்கும். வில்வ இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டியும், கரிசலாங்கண்ணி இலைச்சாறு ஒரு தேக்கரண்டியும் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் விரைவில் குணமாகும்.

உடல் அசதி குறையும்: வில்வ இலையைக் கைப்பிடி அளவு எடுத்து இரவு தண்ணீரில் ஊற வைத்து, தினசரி காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு ஊற வைத்த நீரை குடித்து வந்தால் கை, கால் வலிகள் கட்டுப்படும். அத்துடன் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்த நீரை குடித்து வர காலப்போக்கில் புத்தி தெளியும். வில்வக் காயுடன், வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து, தேமல் மீது தடவி வந்தால் தேமல் மறைந்து சருமம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பும்.

வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும். வில்வப் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் வலிமை பெறும். வில்வப் பூ - மந்தத்தைக் குணப்படுத்தும். பிஞ்சு - குன்மத்தை போக்கும். பழம் - கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

பிசின் - விந்துவை கெட்டிப் படுத்தி அதன் குறையை நீக்கும். வில்வ இலைச் சாறை எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு மண்டலம் காலையும், மாலையும் பத்திய முறைப்படி இறைவனை வணங்கி அருந்தி வந்தால் காமாலை மற்றும் இரத்த சோகையால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.

வில்வ இலைச் சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூக்கில் நீர் வடிதல், சுரம், இருமல், தொண்டைக்கரகரப்பு, வாய் குளறல், மயக்கம் தீரும். தொடர்ந்து 40 நாட்கள் கற்பமுறைப்படி அருந்தி வந்தால் மேற்கண்ட பிணிகளிலிருந்து முழு விடுதலை பெறலாம். வில்வ பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி அருந்தினால் மாந்தம் நீங்கும். வில்வ இளம் பிஞ்சை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்துஅருந்தினால் வயிற்றுப்புண், குடல்புண், தொண்டைப் புண் ஆறும். சிறுபிள்ளைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு, சீதக் கழிச்சல் நீங்கும். வில்வ காயை பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் மண்டைச் சூடு, கண் எரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும்.

வில்வ இலை, இஞ்சி, சோம்பு சேர்த்து குடிநீராக்கி ஒரு மண்டலம் கற்பமுறைப்படி பத்தியம் கடைப்பிடித்து அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும். வில்வ வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு இம்மூன்றையும் சேர்த்துக் காய்ச்சி எட்டில் ஒன்றாய் ஆன பதத்தில் வடித்து தேன் கலந்து அருந்தினால் கொடிய முப்பிணியும் தீரும். வில்வத்தின் கனி, காய், இலை, வேர் முதலானவற்றை மணப் பாகு, ஊறுகாய், குடிநீர், தைலம் இதில் எதாவது ஒன்று தயாரித்து ஒரு மண்டலம் உட்கொண்டால் உடலுக்கு அழகையும், ஆண்மையையும் கொடுக்கும். வாய் குழறிப் பேசும் தன்மை நீங்கும்.

வில்வத்தின் ஒரு வகையே மகா வில்வம். இது குளுமைத் தன்மை கொண்டது. வில்வ இலைகளைவிட சற்று சிறியதாய், வட்ட வடிவில் காணப்படும். சுவையில் வில்வத்தின் இலையை ஒத்திருக்கும். கொடியைவிட சற்றுப் பெரியதாய் இதன் கிளைகள் இருக்கும். இலைகள் கூட்டிலைகளாய் காணப்பட்டு கடைசியில் மூன்று இலைகளாய் முடியும். அந்த மூன்று இலைகளும் சிவன், விஷ்ணு, பிரம்மா என்னும் மூவரும் நானே எனக் காட்டுவதாய் அமையும்.

மகா வில்வம் சர்க்கரை நோயுக்கு அற்புத மருந்து:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மகா வில்வத்தை மருந்தாக்கினால் மிகச் சிறந்த பலனைக் காணலாம். மகா வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட் டுக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து அதிகாலையில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் சர்க்கரையின் அளவு சராசரி நிலைக்கு வரும். சர்க்கரை வியாதியால் உண்டாகும் பிற விளைவுகளும் படிப்படியாய் மறையும்.

குடற்புண் குணமாகும்:

குடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் மகேசன் அருளிய மகா வில்வமே மருந்தென்றால் மிகையல்ல. குடற்புண்ணால் அவதி யுறுவோர் கீழ்க்காணும் மருந்தைத் தயாரித்துச் சாப்பிட்டுப் பாருங்கள். மகா வில்வத்தினுள் சிவனே உறைந்து, உங்களை செவ்வனே குணப் படுத்துவதை உணர்வீர்கள். உலர்ந்த மகா வில்வ இலை 50 கிராம், நெல்லிமுள்ளி, கடுக்காய், தான்றிக்காய், ஓமம், மாம்பருப்பு, வெந்தயம், சீரகம், மஞ்சள் ஆகியவை வகைக்கு 25 கிராம்- இவையனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். பின்னர் இதனைச் சலித்துப் பத்திரப்படுத்தவும் .

இதனை காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக இரண்டு முதல் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வர, 48 நாட்களில் குடற்புண்கள் முழுமையாய் குணமாகும். இது சித்தர்கள் அருளிய சிறப்பான மருந்து. திட சித்தமாய் உண்டு வருபவர்கள் சீக்கிரமே குணமடைவார்கள்.

உடல் வலிவு பெற, மகா வில்வ வேர் 50 கிராம் அளவில் எடுத்து ஒன்றிரண்டாய் சிதைத்து, ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிது மஞ்சள் சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, தினசரி அதிகாலையில் தொடர்ந்து இரு மாதங்கள் சாப்பிட்டு வர, மேனி அழகு பெறும்; முகம் காந்தமாய் ஜொலிக்கும்; ஆண்மை விருத்தியாகும்; குரலில் ஓர் காந்த சக்தி, ஈர்ப்பு சக்தி உண்டாகும்.

இளைப்பு நோய் குணமாக, மகா வில்வ வேர், தூதுவளை வேர், கண்டங்கத்தரி வேர், முசுமுசுக்கை வேர், மிளகு, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் வீதம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவில் தேனில் குழைத்து உண்டுவர, சளிக்கட்டு, இருமல், ஆஸ்துமாவில் உண்டாகும் மூச்சிரைப்பு, சைனஸ், தும்மல், காசநோய் போன்றவை மாயமாய் விலகும்.

மஞ்சள் காமாலை குணமாக, மகா வில்வ வேர், கீழாநெல்லி வேர், நெல்லிமுள்ளி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் ஏழு தினங்கள் தொடர்ந்து குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். கல்லீரல் பலப்படும்; கல்லீரல் சார்ந்த பிற நோய்களும் தணியும்.

கண் நோய்கள் குணமாக, மகா வில்வத் தளிர் இலைகளை நெருப்பில் வாட்டி, அதைத் துணியில் முடிந்து வெது வெதுப்பாய் கண்களில் ஒற்றிவர, கண்சிவப்பு, கண்ணெரிச்சல் போன்றவை மாறும். மகா வில்வத்தால் ரத்த சுத்தி உண்டாகும்; நன்கு செரிமானம் உண்டாகும்; பசியைத் தூண்டும்; மலத்தை நன்கு இளக்கும். மொத்தத்தில் சிவனை நாட சுத்த தேகத்தை உண்டாக்கும். அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வில்வம் பறிக்கக் கூடாது என்றும் கூறுவர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News