உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு அடியில் மரண பயத்துடன் வாழும் தேனி பொதுமக்கள்!
தேனி பழனிசெட்டிபட்டி பொதுமக்கள் உயர்அழுத்த மின் கோபுரங்களுக்கு அடியில் மரண பயத்துடன் குடியிருந்து வருகின்றனர்.;
பழனிசெட்டிபட்டி குடியிருப்பு பகுதிக்குள் உள்ள உயர் மின்னழுத்த மின் கம்பிகள்.
தேனி அருகேஉயர் மின்னழுத்த மின் வழித்தடத்தை இடம் மாற்றி அமைக்க வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., எம்.எல்.ஏ.,வாக உள்ள போடி சட்டசபை தொகுதிக்குள் வருகிறது. இங்குள்ள துணை மின்நிலையத்தில் இருந்து உயர்மின்அழுத்த லைன் (ஹைச்டி லைன்) கோடாங்கிபட்டியை கடந்து செல்கிறது. இந்த மின் வழித்தடம் முழுக்க பழனிசெட்டிபட்டியில் குடியிருப்புகளுக்கு மேலே செல்கிறது. இந்த மின்வழித்தடம் அமைக்கப்படும் போது பழனிசெட்டிபட்டி பேரூராட்சி உருவாகவில்லை. தற்போது இது மிகப்பெரிய குடியிருப்பாக உருவாகி விட்டது.
இந்த ஹைச்டி லைன் குடியிருப்புகளின் மத்தியில் செல்வதால் அதனடியில் வாழும் மக்கள் தங்கள் வீட்டு மாடிக்கு கூட வர முடியவில்லை. வந்தால் மின்அழுத்த கோபுரத்தின் வயரில் இருந்து 10 அடி துாரம் தள்ளி நின்றாலும் மின்அழுத்த ஈர்ப்பு காரணமாக இழுக்கப்பட்டு மின்சாரம் பாய்ந்து சாம்பலாகி விடுகின்றனர்.
இப்படி பலர் உயிரிழந்த சம்பவங்களும் பல முறை நடைபெற்றுள்ளன. இந்த ஊர் மக்கள் தங்களின் முக்கிய கோரிக்கையாக உயர் அழுத்த மின்கோபுர வழித்தடத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே மரண பயத்துடன் மக்களின் வாழ்க்கைத் தொடர்கிறது.