கம்பத்தில் ரேஷன் அரிசிக்குள் கஞ்சா கடத்திச் சென்ற 2 வாலிபர்கள் கைது
கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசிக்குள் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.;
பைல் படம்
கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு அரசு பஸ்சில் ரேஷன் அரிசியில் மறைத்து வைத்து கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.
கம்பத்தில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப்பறக்கிறது. இதுவரை வந்த எந்த எஸ்.பி.,க்களாலும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.
தற்போதைய எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே இந்த வரிசையில் சேர்ந்துள்ளார். கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதை அடியோடு நிறுத்த வேண்டும்.
கஞ்சா விற்பனையைமுற்றிலும் தடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். கம்பம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.ஐ., விஜய்ஆனந்த் கம்பத்தில் இருந்து கோம்பை செல்லும் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கேரளாவிற்கு அரிசி கடத்திச் சென்ற ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி கம்பம் புதுப்பட்டி நாயக்கர் தெருவை சேர்ந்த சுந்தரம், 35, முத்துப்பாண்டி, 30 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் கேரளாவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திச் செல்பவர்கள். அரசு பஸ்சில் கடத்திச்செல்வார்கள்.
சாப்பிடத்தானே அரிசி கொண்டு செல்கின்றனர் என பல நேரங்களில் போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வழக்கம். ஆனால் இம்முறை (நேற்று இரவு) இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரியும், எஸ்.ஐ., விஜய்ஆனந்த் இருவரும் இவர்கள் கேரளாவிற்கு கொண்டு சென்ற ரேஷன் அரிசி மூடைகளை ஆய்வு செய்தனர்.
அதற்குள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கம்பத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தடை விரைவில் முழுமையாக நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.