மத்தியில் வல்லரசு... மாநிலத்தில் நல்லரசு... தேனியில் டிடிவியின் புதிய கோஷம்!

மத்தியில் வல்லரசு... மாநிலத்தில் நல்லரசு... வேண்டும் மோடி... மீண்டும் மோடி... வேண்டும் டிடிவி மீண்டும் டிடிவி என தேனியில் அமமுக கோஷத்தை முன்னெடுத்துள்ளது.

Update: 2024-03-22 16:29 GMT

தேனியில் டிடிவி தினகரன் பாஜக., கூட்டணி சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது பிரச்சார வியூகம் குறித்து திட்டமிடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து அ.ம.மு.க.,வின் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் கதிர்காமு கூறியதாவது:

தேனி தொகுதியில் தினகரன் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எங்களிடம் பல கட்சியினர் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் தங்கள் விருப்பத்தை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து டிடிவி களம் இறங்குகிறார். அவர் தொகுதி முழுக்க பரிச்சயமானவர். எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காதவர்கள். தொகுதி மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல மதிப்பு உள்ளது. எங்களை பொறுத்தவரை மற்ற கட்சியினரை திட்ட வேண்டும், குறை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கள் வேட்பாளர் யார்? சின்னம் எது? அவர் இதற்கு முன்பு செய்த சாதனைகள் என்ன? என்பது குறித்து மக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னால் போதும். அதன் பின்னர் பிரதமர் மோடி செய்த சாதனைகள். பிரதமர் மோடியின் முக்கியத்துவம். அவர் மூலம் நாடு பெற்றுள்ள நன்மைகள். அடுத்து வரும் முக்கிய தருணங்கள். நாட்டிற்கு தேவைப்படும் தலைவரின் அவசியம். இந்தியா உலக அளவில் செய்துள்ள சாதனைகள். நமது நாட்டின் ராணுவ வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து மக்களிடம் விளக்கி சொல்வோம். இதற்காக சில கோஷங்களை உருவாக்கி உள்ளோம். மத்தியில் வல்லரசு, மாநிலத்தில் நல்லரசு... வேண்டும் மோடி... மீண்டும் மோடி..., வேண்டும் டி.டி.வி., மீண்டும் டி.டி.வி., என்ற கோஷங்களை முன்வைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் வேட்பாளர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொகுதிக்கு வருகிறார். அன்று பட்டாளம்மனை வழிபாடு செய்த பின்னர் பிரச்சாரத்தை தொடங்குகிறார். நாங்கள் பிரச்சாரத்தின் ஆரம்ப நாள் முதல் பிரச்சாரத்தின் நிறைவு நாள், ஓட்டுப்பதிவு நாள் உட்பட அத்தனை நாட்களிலும் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து தெளிவாக திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பேசினார்.

Tags:    

Similar News