தேனியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மாவட்ட தலைநகரான தேனியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாதது பெண்கள் கல்விக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது.

Update: 2022-06-22 02:46 GMT

பைல் படம்.

தேனியில் ஏராளமான மெட்ரிக் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகள் உள்ளன. தற்போது உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் தங்கள் பெண்களை அரசு பெண்கள் பள்ளியில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.

தற்போது தேனியில் இரண்டு பெரும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அட்மிஷன் வாங்கும் முன்னர் பெற்றோர்கள் பரிதவித்துப்போய் விடுகின்றனர். பள்ளி நிர்வாகங்களும் அதிகரித்து வரும் அட்மிஷன்களால் திணறி வருகின்றன.

தற்போது உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாற்றி வி்ட்டு, அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்ட கட்டடத்தை (தற்போது செயல்பாடு இன்றி உள்ளது.) பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என அல்லிநகரம் கிராம கமிட்டி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இதற்கு தேவையான நிதி உதவி உட்பட அத்தனை உதவிகளையும் செய்ய தயார் என அரசிடம் மனு கொடுத்து 22 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டன. இதற்கு உரிய கட்டண தொகை ஒரு லட்சம் ரூபாய் பள்ளிக்கல்வித்துறைக்கு டெபாஸிட் செய்து எட்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. ஆனாலும் கல்வித்துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.தேனி நகர் பகுதியில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டுமானால் அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, ரத்தினம்நகர், சுக்குவாடன்பட்டி உட்பட்ட பகுதிகளில்  வசிக்கும் மாணவிகள் குறைந்தபட்சம் 4 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலில் மாணவிகள் 4 கி.மீ., சென்று வருவது எல்லாம் சவாலான காரியம். எனவே அல்லிநகரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், தற்போதைய அல்லிநகரம் கிராம கமிட்டி துணைச் செயலாளருமான வீரமணி கூறியுள்ளார்.

Tags:    

Similar News