தேனியில் தக்காளி கிலோ 4 ரூபாய்க்கு விற்பனை, விவசாயிகள் தவிப்பு

தேனி மாவட்டத்தில் தக்காளி விலை குறைந்துள்ளதால், கடும் நஷ்டம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-08-30 14:45 GMT

தோட்டத்தில் பறிக்கப்பட்ட தக்காளியை தரம் பிரிக்கும் பெண். இடம் தேனி மாவட்டம். கூடலுார்

தேனி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி 4 ரூபாய் அளவுக்கு விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் விளைவித்த தக்காளியை விற்பனை செய்ய முடியாமல் பெரும் இழப்பினை சந்தித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதனால் மார்க்கெட்டிற்கும் வரத்து அதிகரித்துள்ளது.இங்கிருந்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை, கேரள மார்க்கெட்டுகளுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது.

இருப்பினும் உள்ளூர் மார்க்கெட்டில் விலை கிலோவிற்கு 4 ரூபாய் என குறைந்துள்ளது. இதில் கமிஷன் போக விவசாயிகளுக்கு ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

இந்நிலையில், தக்காளி பறிக்கும் செலவு, பிரிக்கும் செலவு, பேக்கிங் செலவு, மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி இவற்றை கணக்கிட்டால் விளைந்த தக்காளியை பறித்து விற்றால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால் விவசாயிகள் பறித்த தக்காளியை தோட்டத்தின் ஓரங்களில் போட்டு வைத்து அந்த வழியாக செல்லும் மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு தக்காளியை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News