தேனி : புதிய வகை போதையில் இருந்து இளைஞர்களை மீட்குமா காவல்துறை?

புதிய வகை போதையால் தள்ளாடும் இளைஞர்களை மீட்க காவல்துறை முன்வர வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-13 06:00 GMT

தேனி மாவட்டத்தில் புதிய வகை போதையால் தள்ளாடும் இளைஞர்களை மீட்க காவல்துறை முன்வர வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதிய வகை போதை பொருட்களை தேடி அலைகின்றனர். இதில் மதுபானம், சிகரெட், கஞ்சா, பிரவுன் சுகர், போதை மாத்திரைகள் உள்ளிட்டவைகளை கடந்து, தற்போது புதிய வகை போதைப் பொருட்களை கண்டறிந்து பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும் என்று தமிழகஅரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதிய வகை போதை பொருட்களை கண்டறிந்து பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒயிட்னர் என்று அழைக்கக்கூடிய வெள்ளை அளிப்பானை ஒரு சிறிய கேரிபையில் ஊற்றி அதனை மூக்கின் வழியாக சுவாசம் செய்து போதை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும் பெண்கள் பயன்படுத்தும் நெய்பாலிஸ் இருந்து வரக்கூடிய வாசனையை முகர்ந்து போதையாக பயன்படுத்தி வருகின்றனர். 

இந்தியாவின் இன்றைய இளைஞர்களே, நாளைய தூண்கள் என்று அழைக்கப்படும் நிலையில் அவர்களின் எதிர்காலம் இதுபோன்ற பழக்கத்திற்கு அடிமையாகி, வாழ்க்கை சீரழிந்து கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே. தேனி மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீண் உமேஷ் டோங்கரே தனிப்படை அமைத்து, இதுபோன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களை மீட்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


.

Tags:    

Similar News