என்.ஐ.ஏ., கண்காணிப்பு பட்டியலில் தேனி இடம் பெற்றது எப்படி?

NIA Act -மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு முகமையான என்.ஐ.ஏ. கண்காணிப்பு பட்டியலில் தேனி மாவட்டமும் இடம் பெற்று விட்டது.

Update: 2022-09-22 05:15 GMT

NIA Act -சட்ட விரோத பண பறிமாற்றம், அலைக்கற்றைகளை திருடி அனுப்புதல், தொழில்நுட்பங்களை நாட்டிற்கு எதிராக பயன்படுத்துதல், தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுதல், மாற்று மத தலைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துல் போன்றவற்றை கண்காணித்து தடுத்து நிறுத்தி சதி திட்டம் தீட்டிய சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பது தேசிய பாதுகாப்பு முகமையின் முக்கிய செயல்பாடு ஆகும்.

தேனியில் என்.ஐ.ஏ., அலுவலகம் இல்லாவிட்டாலும், அதன் கண்காணிப்பு முழுவதும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. தமிழகத்தில் இந்த மத அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தேனி மாவட்டத்திற்குள் அடைக்கலம் புகுந்தனர். இவர்களை தேனி மாவட்டத்திற்கு வந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

அப்போது முதல் என்.ஐ.ஏ., பார்வை தேனி மாவட்டத்தின் மீது பதிந்தது. தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் தேனியில் தனியாக ஒரு டெலிகாம் எக்சேஞ்ச் நடத்தி, பி.எஸ்.என்.எல்., அலைக்கற்றைகளை திருடி வெளிநாடுகளுக்கு அனுப்பிய வழக்கில் தேனியில் நான்கு பேர் கைதாகினர். இவர்களின் விசாரணையில் கொச்சி, திருவனந்தபுரம், எர்ணாகுளம் என கேரளாவை சேர்ந்த பலர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

தவிர தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலர் தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளாக தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். இவர்களில் பலரையும் என்.ஐ.ஏ. கையில் எடுத்து விசாரித்து வருகிறது. தவிர ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற இடங்களில் என்.ஐ.ஏ., நடத்தி வரும் விசாரணையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ.,விற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இது போன்ற பல காரணங்களால் தேனி மாவட்டத்தை என்.ஐ.ஏ., தனது கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. மற்றபடி தேனி மாவட்டத்தில் மத மோதல்கள் இல்லாவிட்டாலும், அதற்கான அச்சுறுத்தல் இருந்து வருகிறது. முஸ்லிம் அமைப்புகளும், இந்து அமைப்புகளும் கம்பத்தில் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாக புகார் எழுப்பி வருகின்றனர். சில நேரங்களில் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினர் மீது தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. தொடர்ந்து நாங்கள் கண்காணிக்க இதுவும் ஒரு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News