தேனி மாவட்ட சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர வாய்ப்பு

கேரளா விஷம பிரச்சாரம் செய்தால் தேனி மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை ஏழாக உயரும் வாய்ப்பு உள்ளது.

Update: 2022-09-22 07:24 GMT

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

தேனி மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது உள்ள 4 என்ற எண்ணிக்கையில் இருந்து ஏழாக உயரும் வாய்ப்பு உள்ளது என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: -

பரம்பிக்குளம் ஆழியாறு அணையின் மதகை கேரள விஷமிகள் உடைத்து விட்டனர். இதன் மூலம் முல்லைப்பெரியாறு அணையிலும், பரம்பிக்குளம் போல் ஒரு அசம்பாவிதம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது என பிரச்சாரம் செய்கின்றனர். சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த விஷயத்தை முன்வைக்க உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் கேரள அரசின் வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். முல்லைப்பெரியாறு அணை பற்றி கேரளா விஷம் கக்கினால், நாங்கள் பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் தாலுகாக்களில் தமிழர்களை ஒருங்கிணைத்து மீண்டும் தேனி மாவட்டத்துடன் இணைக்க கோரும் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். இதற்காக எந்த நெருக்கடியையும் சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம். கேரளா மட்டும் விஷம செயல்களில் இறங்கட்டும், நாங்கள் பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க போராடி வெற்றி பெறுவோம். அப்போது தேனி மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது உள்ள நான்கு என்ற எண்ணிக்கையில் இருந்து ஏழாக உயரும். இது தான் கேரளாவிற்கு இறுதி எச்சரிக்கை. நீங்கள் விஷமத்தை நிறுத்தினால் நாங்களும் நிறுத்திக் கொள்வோம். நீங்கள் விஷமத்தை பரப்பினால், நீங்கள் அபகரித்து வைத்துள்ள எங்கள் நிலப்பரப்பை மீட்டெடுப்போம். பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைந்தால் முல்லைப்பெரியாறு அணை முழுமையாக எங்களிடம் வந்து சேர்ந்து விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News