சமூக விரோதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் தேனி பேருந்து நிலையம்
தேனி பஸ்ஸ்டாண்ட் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பெண்களுக்கு இரவில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது.;
தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது.
தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டி சில வருடங்களே ஆன நிலையில், பராமரிப்பு இன்மையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்ஸ்டாண்டில் பல இடங்களில் சிறுநீர், மலம் கழித்து வைத்துள்ளனர். எங்கு திரும்பினாலும் மிகவும் அசுத்தம் காணப்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது.
தவிர பஸ்ஸ்டாண்டை சுற்றிலும் ஆறுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் குடிமகன்களின் அடாவடி அதிகம் காணப்படுகிறது. கஞ்சா, புகையிலை விற்பனையும் களைகட்டி வருகிறது. பஸ்ஸ்டாண்டில் உள்ள பூங்கா இரவில் முழுமையாக குடிமகன்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுகிறது. இது தவிர பல சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. பஸ்ஸ்டாண்டில் உள்ள சுரங்க பாதைகளை மிகவும் மோசமான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்கள் இரவில் பஸ்ஸ்டாண்ட் வரவே அச்சப்படுகின்றனர். இங்குள்ள அவுட் போஸ்ட் போலீஸ் ஸ்டேனை முழு வீச்சில் செயல்படுத்தி, குடிமகன்கள், சமூக விரோதிகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பஸ்ஸ்டாண்டினை சுத்தமாக பராமரித்து பயணிகளுக்கு குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.