குடியிருப்பு பகுதியில் தேங்கிய சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்

இராசிங்காபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Update: 2021-06-05 14:13 GMT

குடியிருப்பு பகுதியில் தேங்கிய சாக்கடை நீர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, ராசிங்காபுரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், ராசிங்காபுரம் ஊராட்சி கிராமத்தில் உள்ளது அழகர்சாமி கோவில் தெரு. இந்த தெருவில் சாக்கடை கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. தொடர்ந்து சாக்கடை கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் தேங்கிய சாக்கடை நீர் சிறிய குளம் போல் காணப்படுகிறது. சாக்கடை நீர் அதிகமாக தேங்கி குடியிருப்பு வீடுகளுக்குள் செல்லும் நிலையில் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் சாக்கடை நீரில் நடந்து செல்வதால் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சாக்கடை கட்டும் பணியை ஊராட்சி நிர்வாகம் விரைந்து செயல் படுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும், சாக்கடை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது சாக்கடை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News