நடந்த சம்பவம்.... நம்ப முடியாத சம்பவம்..! ஆன்மீகமும் மருத்துவமும் இணைந்த நிஜக்கதை..!

தேனி மாவட்டத்தில் உண்மையில் நடந்த அறிவியலும், ஆன்மீகமும் இணைந்த ஒரு நிஜசம்பவத்தை பார்க்கலாம்.

Update: 2023-12-23 04:52 GMT

ஆன்மிகம் அறிவியல் இணைப்பு (கோப்பு படம்)

ஆண்டிபட்டியைச்  சேர்ந்த மிகப்பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் (பெயர் மறைப்பது தானே மருத்துவ நாகரீகம்). இவருக்கு தாடையில் கொப்புளம் உருவானது. அம்மைகொப்புளம் என குடும்பத்தினர் நினைத்து வேப்பிலையை அரைத்து பற்று போட்டனர். தலையிலும் வேப்பிலை தடவினர். நாள் ஆக, ஆக வீக்கமும் வலியும் அதிகரித்து விட்டது.

அந்த ரியல் எஸ்டேட் அதிபர் வலி தாங்காமல் மயக்கமாகி விட்டார். இந்நிலையில் ஆண்டிபட்டி, தேனி க.விலக்கு, தேனி நகர் பகுதிகளில் பல மருத்துவுமனைகளுக்கு அவரை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியாது. வீட்டிற்கு கொண்டு போய் விடுங்கள் என அத்தனை பேரும் ஒருமித்த குரலில் கூறி விட்டனர்.

வேறு வழியில்லாமல் குடும்பத்தினர் வீட்டிற்கு அவரை கொண்டு வந்து கட்டிலில் இருந்து இறக்கி கீழே போட்டு விட்டனர். கீழே போட்டாத்தானே உயிர் போகும். கட்டிலில் உயிர் போகக் கூடாது என்பது இந்துக்களின் ஐதீகம். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சொல்லி அனுப்பி விட்டனர். அவரது நண்பர் ஒருவர் சிவபக்தர். அதுவும் மதுரை பாண்டிமுனீஸ்வரன் பக்தர். தனது நண்பரை பார்த்த அவர், வீட்டிலேயே அமர்ந்து தான் வணங்கும் பாண்டிமுனீஸ்வரனை வேண்டினார். அவருக்கு அருள் இறங்கி விட்டது.

‘‘யப்பா, இவருக்கு ஆயுள் கெட்டியாக உள்ளது. தற்போது இறக்க வாய்ப்பு இல்லை. வாயில் உருவானது அம்மை கொப்புளம் இல்லை. அது வேறு ஒரு பிரச்னை. தேனியில் ஒரு மருத்துவமனையில் தற்போது 8 பேர் கொண்ட டாக்டர் குழுவினர் உள்ளனர். அந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் எனக்கூறினார். (நலம் மருத்துவமனை)) அவர்களும் சரி சாமி சொல்கிறதே என நினைத்து அவசரமாக கார் பிடித்து நலம் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர் கூறியது போல் மிகப்பெரிய ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்து விட்டு டாக்டர்கள் எட்டு பேர் ரிலாக்ஸாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

அந்த நேரம் ரியல் எஸ்டேட் அதிபர் மயக்கமடைந்த நிலையில் கொண்டு வரப்படுகிறார். இதில் பெரிய ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பல் அறுவை சிகிச்சை நிபுணரும் அப்போது அங்கு இருந்திருக்கிறார். ரியல் எஸ்டேட் அதிபரை சோதித்த குழுவினர். அவருக்கு பல்லுக்கு கீழே செப்டிக் ஆகியுள்ளதும், அது சலம் கோர்த்து மூளையை பாதிக்கும் நிலைக்கு சென்றுள்ளதும், சிறிது நேரம் தாமதித்திருந்தால் புரையோடி அவர் உயிரிழக்க வாய்ப்புள்ளதும் கண்டறியப்பட்டது. உடனே துரிதமாக செயல்பட்ட டாக்டர்கள் குழுவினர் ஆபரேஷன் செய்தனர். மிகச்சிறிய ஆபரேஷன் தான், புண் வந்து இன்பெக்ஷன் ஆன பல்லை அகற்றினர். ரத்தம், சலம் முழுமையாக அகற்றப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்குள் கண்விழித்த ரியல்எஸ்டேட் அதிபர், அடுத்த சில மணி நேரங்களில் எழுந்து உட்கார்ந்தார். குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு சொல்ல வேண்டுமோ? மூன்றாவது நாளே டிஸ்சார்ஜ் ஆகி, வீடு திரும்பி விட்டார். அண்மையில் அவரது மகனுக்கு ஆண்டிபட்டியே வியக்கும் வண்ணம் திருமணம் தடபுடலாக நடத்தி முடித்தார்.

இதில் பல கேள்விகள் எழுகின்றன. அறிவியல் வளர்ந்த நிலையில் இத்தனை மருத்துவமனைகள் கை விட்டது எப்படி? அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் (நலம் மருத்துவமனை) எட்டு டாக்டர்கள் தற்போது உள்ளனர் என அருள்வாக்கு கூறியது எப்படி? பல் இன்பெக்ஷனை குடும்பத்தினர், அம்மைகட்டு என நினைத்து அவரை துன்பப்படுத்தி, மரணத்தின் வாயில் வரை கொண்டு சென்றது எதனால்? இப்படி பல விடை தெரியாத விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

Tags:    

Similar News