மழையில் கரைந்து போன ரூ. 10 லட்சம் ரூபாய்
Road Work Construction- தேனி மாவட்டம், போடியில் குரங்கனி முதல் முதுவாக்குடிக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ரோடு மழையில் கரைந்து போனது.;
இரண்டு மாதத்திற்கு முன்பு போடி குரங்கனியில் இருந்து முதுவாக்குடிக்கு அமைக்கப்பட்ட ரோடு தான் இப்போது இப்படி மாறி உள்ளது.
Road Work Construction- கேட்க ஆச்சர்யமாகவும் இருக்கும். சற்று கோபமும் வரும். ஆனால் இது தான் உண்மை. இப்படி நடக்கும் என முன்கூட்டியே எச்சரித்தும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கோட்டை விட்டு விட்டது.
தேனி மாவட்டம் போடி தாலுகாவில் குரங்கனி முதல் முதுவாக்குடி வரை மண் சாலையை, புதுப்பிக்க போடி ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இந்த நிதியில் ஏற்கனவே இருந்த சாலை புதுப்பிக்கப்பட்டது.
142 ஆண்டுகள் பழமை கொண்ட குரங்கனி முதல் டாப் ஸ்டேஷன் வரையிலான சாலையின் ஒரு பகுதியை ஒப்பந்தகாரர் ஒரு வாரத்தில் புதுப்பித்தார்.
சாலை புதுப்பிக்கப்பட்டபோதே, தேனி மாவட்ட நிர்வாகத்திடம் இந்த விஷயத்தை விவசாயிகள் கொண்டு சென்றனர். புதுப்பிப்பதாக ரோட்டில் உள்ள செடி கொடிகளை மற்றும் அகற்றி உள்ளனர். அதாவது களைகளை வெட்டி அகற்றி உள்ளனர். இந்த ரோட்டில் உடனடியாக கல் பாவ வேண்டும். ரோட்டோரம் இரண்டு புறமும் வாய்க்கால் வெட்ட வேண்டும். இல்லை என்றால் இரண்டு மழைக்கு கூட இந்த ரோடு தாங்காது என விவசாயிகள் தெள்ளத்தெளிவாக அதிகாரிகளிடம் கூறினர். ஆனால் வழக்கம் போல் அதிகாரிகள் விவசாயிகளின் கூற்றை காதில் வாங்கவில்லை.
தேனி மாவட்ட திட்ட இயக்குனரிடமும் இந்த விஷயத்தை நேரடியாக விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினர். ஆனால் பலன் இல்லை. மாறாக இந்த ரோடு போட்ட உடனே, அதன் தரத்தை கூட ஆய்வு செய்யாமல் உடனடியாக ஒப்பந்ததாரருக்கு உடனடியாக 10 லட்சம் ரூபாயினை விடுவித்தும் விட்டனர்.
விவசாயிகள் எச்சரித்தது போன்றே இந்த ரோடு தற்போது முழுமையாக அழிந்து இடுப்பளவு பள்ளம் ஏற்பட்டு விட்டது. இந்த ரோட்டில் நான்கு சக்கர வாகனமும் செல்ல முடியாது. இரு சக்கர வாகனமும் செல்ல முடியாது. அந்த அளவிற்கு மோசமாக இந்த சாலையின் இன்றைய நிலை காட்சியளிக்கிறது.
இதனால் முதுவாக்குடி மக்கள் முன்பை விட அதிக துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒரு புறத்திலே நிதியே இல்லை என்று இக்கட்டான சூழ்நிலையில் தத்தளித்து வரும் நிலையில், இது போன்ற பண விரயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் இந்த அவல நிலை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதுவாக்குடியில் இருப்பவர்கள் எவரும் நம்மை எதிர்த்துப் பேச முடியாது என்கிற தைரியத்தில் இந்த செயலை செய்திருக்கும் கொட்டக்குடி பஞ்சாயத்து நிர்வாகத்தை முதலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2