வாகன ஒப்பந்த பத்திரம் வாங்காமல் வாகனங்களை எக்சேஞ்ச் செய்யாதீர்கள்

வாகன ஒப்பந்த பத்திரங்களை வாங்காமல் உங்கள் வாகனங்களை எக்சேஞ்ச் செய்யாதீர்கள் என போலீஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Update: 2023-12-10 11:00 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் மற்றவர்களின் பெயரில் இயக்கப்படுவதாகவும், அந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினாலோ, திருட்டு வழக்கில் மாட்டினாலோ வாகன உரிமையாளர்கள் தான் சிக்கலில் மாட்ட வேண்டியது வரும், எனவே வாகன ஒப்பந்த பத்திரங்களை வாங்காமல் உங்கள் வாகனங்களை எக்சேஞ்ச் செய்யாதீர்கள் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

இது குறித்து தேனி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தேனி மட்டுமின்றி மாவட்டத்தின் பல இடங்களில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் சிறு நிறுவனங்கள் நுாற்றுக்கணக்கில் முளைத்துள்ளன. இதில் வாகன விற்பனை ேஷாரூம் மற்றும் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வாகன உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை வாங்கும் போது வாகன ஒப்பந்த பத்திரம் கொடுக்கின்றனர்.

பெரும்பாலும் மற்றவர்கள் கொடுப்பதில்லை. பழைய வாகனங்களை தானே விற்கிறோம் இதில் என்ன பெரும் சிரமம் வந்து விடப்போகிறது என நினைத்து வாகனங்களை விற்று விடுகின்றனர். அப்படி விற்ற பின்னரும் வேறு யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர், அந்த வாகனத்தை இயக்குவார். அவர் முறையாக பணம் செலுத்துகிறாரா? என்பதை உறுதிப்படுத்தும் வரை, வாகனத்தின் பதிவு பெயரை விற்பனை நிறுவனங்களும், விற்றவரிடம் இருந்து வாங்கியவர் பெயருக்கு மாற்றித்தருவதில்லை. இதுபோல் தேனி மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் வேறு யாரோ ஒருவர் பெயரில் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களுக்கு இன்சூரன்ஸ்சும் இருப்பதில்லை.

இதற்கிடையில், இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினாலோ, அல்லது வேறு வகையான சட்ட விரோத செயலில் சிக்கினாலோ வாகனத்தின் ஒரிஜனல் உரிமையாளர் சிக்கலில் மாட்ட வேண்டியிருக்கும். இதுபோல் பலர் சிக்கிக் கொண்டு சிரமப்பட்டு வருகின்றனர். பலர் லட்சக்கணக்கில் அபராத தொகை செலுத்தி உள்ளனர்.

இந்த சிக்கல் வராமல் இருக்க உங்கள் வாகனங்களை விற்பனை நிறுவனங்களிடம் கொடுக்கும் போதே, ‛வாகன விற்பனை ஒப்பந்த பத்திரம்’ வாங்கி விடுங்கள். இது வாகனம் விற்பனை செய்பவருக்கு குறைந்தபட்ச பாதுகாப்பினை வழங்கும். வாகனத்தை விற்கும் போது, வாங்குபவர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்த பின்னர் விற்பனை செய்வது மட்டுமே எல்லாவற்றையும் விட சிறந்த வழி. இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News