தேனி நகராட்சியில் பாலீதீன் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

தேனி நகராட்சி பகுதிகளில் பாலீதீன் பொருட்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Update: 2023-11-01 16:09 GMT

கோப்புப்படம் 

தேனி நகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாலீதீன் பொருட்கள் விற்பனைக்கும், பயன்பாட்டிற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் மக்களிடையே இதன் பயன்பாடும் குறைந்தது.

இந்நிலையில் சில மாதங்களாக நகராட்சி சுகாதாரத்துறையின் கவனம் டெங்கு தடுப்பு, கொரோனா தடுப்பு பணிகளின் பக்கம் திரும்பியது. இந்நிலையில் நகர் பகுதிகளில் மெல்ல, மெல்ல அதிகரிக்க தொடங்கிய பாலீதீன் பயன்பாடு தற்போது முழுமையாக அதிகரித்துள்ளது.

நகராட்சியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பலசரக்கு கடைகளில் கூட பாலீதீன் பைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். குறிப்பாக ஆடு, கோழி, மீன் இறைச்சிக்கடைகளில் தான் பாலீதீன் பைகள் 100 சதவீத பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை தடுக்காவிட்டால் நகராட்சியின் சுற்றுப்புற சுகாதாரம் மீண்டும் கடுமையாக சீர்கேடு அடைந்து விடும்.

இதனை தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது. எனவே சுகாதாரத்துறை விழித்துக் கொண்டு மீண்டும் தேனி நகராட்சி பகுதிகளில் பாலீதீன் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News