வைகை அணையில் இன்று 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை?

வைகை அணையில் இன்று 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-11-07 02:15 GMT

வெள்ளப்பெருக்கால் இரு கரைகளையும் தொட்டுச்செல்லும் வைகை ஆறு.

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று ஐந்தாவது நாளாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. ஆண்டிபட்டியில் 61.8 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 12.2 மி.மீ., வீரபாண்டியில் 21.8 மி.மீ., பெரியகுளத்தில் 14 மி.மீ., மஞ்சளாறில் 10.4 மி.மீ., சோத்துப்பாறையில் 52 மி.மீ., வைகை அணையில் 23.4 மி.மீ., போடியில் 21.3 மி.மீ., உத்தமபாளையத்தில் 50.4 மி.மீ., கூடலுாரில் 21.2 மி.மீ., பெரியாறு அணையில் 35.2 மி.மீ., தேக்கடியில் 46.8 மி.மீ., சண்முகாநதியில் 16 மி.மீ., மழை பெய்தது.

இந்த மழையால் வைகை அணைக்கு விநாடிக்கு 2310 கனஅடி நீர் வரத்து உள்ளது. மூல வைகையிலும் மழை பெய்துள்ளதால், நேரம் செல்ல, செல்ல இன்னும் நீர் வரத்து அதிகரிக்கும். தற்போது அணையின் நீர் மட்டம் 68.10 அடியாக உள்ளது. இந்த நீர் மட்டம் 68.50 அடியை இன்று பிற்பகலில் தொட்டு விடும். எனவே இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். நீர் மட்டம் 69 அடியை தொட்டதும், மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டு வரும் நீர் முழுக்க வெளியேற்றப்படும்.

பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2600 கனஅடியை தொட்டு விட்டது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணை நீர் மட்டம் 127 அடியை தொட்டு விட்டது. இன்னும் நீர் மட்டம் உயரம் வாய்ப்புகள் உள்ளது. பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கும் வசதிகள் உள்ளது. எனவே தற்போதைக்கு பெரியாறு அணையில் இருந்து பெரிய அளவில் நீரை திறக்க வாய்ப்புகள் இல்லை.

சோத்துப்பாறை அணை நிரம்பி வழியும் நிலையில், மஞ்சளாறு அணையும், சண்முகாநதி அணையும் மாவட்டத்தில் நிரம்பி உள்ளன. தொடர்ந்து சுருளிஅருவி, சின்னசுருளிஅருவி, அணைக்கரைப்பட்டி நீர் வீழ்ச்சி, கும்பக்கரை அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News