பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தேனியில் மக்கள் தொடர்பு முகாம்..!

பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் தேனியில் மாபெரும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

Update: 2024-01-26 13:30 GMT

தேனி SBI வங்கி சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்ற உயர் அதிகாரிகள் மகளிர் குழுக் கடன்கள் வழங்கினர்.

மதுரை மண்டல மேலாளர் மதன் தலைமை வகித்தார். துணைப்பொதுமேலாளர் அமித்ரஞ்சன் முன்னிலை வகித்தார். முதன்மை மேலாளர்கள் ரெங்கராஜ், ஜெயசரவணன் வரவேற்றனர். தேனி பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள், பயனாளிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் சென்னை வட்டார பொதுமேலாளர் கோவிந்த் நாராயன் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கார் லோன், பல்வேறு வகையான வீட்டு லோன், தனிநபர் கடன், தொழில் கடன், விவசாயக்கடன், கல்விக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் உட்பட 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.20 கோடிக்கான கடன் உத்தரவுகளை வழங்கினார். மேலும் 30 பயனாளிகளுக்கான வராக்கடன் தீர்வுக்கான ஒப்புதல்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார். வங்கி மூலம் கடன் பெற்றோர் தங்களது செயல்பாடுகளை குறித்து விளக்கம் அளிக்கும் அரங்குகளை அமைத்திருந்தனர்.

இது  குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: மக்களுக்கு முழுமையான சேவை வழங்கவே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக எஸ்.பி.ஐ., வங்கி இந்த சேவையில் முதன்மை இடத்தை பெற்றுள்ளது. வங்கியில் பல்வேறு வகையான கடன் சேவைகள் வழங்கப்படுகின்றன.

மக்கள் கொடுக்கும் முதலீட்டுக்கு பல்வேறு வகையான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் முதலீடுகளுக்கான சிறப்பு பாதுகாப்பு வசதிகள் உள்ளன. நிலையான நிரந்தர வருவாய் திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. வங்கி சேவைகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகளை வங்கிகள் மூலம் நடத்துவது அவர்களுக்கு வங்கிச்சேவைகள் எளிதில் கிடைக்க மிகவும்  உதவியாக இருக்கும். வங்கிகளை கையாள்வதற்கு மக்கள் எந்தவித தயக்கமும் காட்ட வேண்டாம்.

வங்கி பணியாளர்களும், வங்கித்துறை அதிகாரிகளும் மக்களுக்கு உதவி செய்யவே நியமிக்கப்பட்டுள்ளனர். வங்கி பணிகளை பயன்படுத்திக் கொள்ள மக்கள் முன் வருவதன் மூலம் தங்களின் பாதுகாப்பான வாழ்வியலை உறுதிப்படுத்த முடியும். அந்த அளவு பலநுாறு சிறப்பு திட்டங்கள் எஸ்.பி.ஐ., வங்கிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர்.

Tags:    

Similar News