மதுரை- தேனி அகலப்பாதையில் ரயிலை வரவேற்று ஆர்வமாக பயணித்த மக்கள்

மதுரை- தேனி அகல ரயில்பாதையில் இயக்கப்பட்ட ரயிலை மக்கள் அதில் பயணித்து கொண்டாடி வருகின்றனர்.

Update: 2022-05-27 16:15 GMT

மதுரையில் இருந்து தேனிக்கு அகலப்பாதையில் வந்த ரயில்.

மதுரை- உசிலம்பட்டி- ஆண்டிபட்டி- தேனி வழியாக போடிக்கு இயக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இந்த பாதையினை அகல ரயில் பாதையாக மாற்ற 550 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்தன. தேனி வரை பணிகள் நிறைவடைந்துள்ளன. தேனி- போடி இடையே இன்னும் ரயில் பாதை அமைக்கப்படவில்லை. இப்பணிகள் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகளாவது ஆகும்.

எனவே மதுரை- தேனி வரை பணிகள் நிறைவடைந்ததால் ரயில்வே நிர்வாகம் அகல பாதையில் ரயிலை இயக்கியது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த ரயிலை மக்கள் பெருவாரியாக வரவேற்றனர். முதல் நாளான இன்று அகல ரயிலில் பயணிக்க பொதுமக்கள் பொழுது போக்கிற்காகவும், உற்சாகத்திற்காகவும், ரயில்வேத்துறையினை பாராட்டவும் வேண்டுமென்றே, எந்த வேலையும் இல்லாத நிலையில், ரயிலில் டிக்கெட் எடுத்து பயணித்தனர். தேனியில் இருந்து ரயில் ஏறிய பலர் ஆண்டிபட்டியில் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடித்து தேனி வந்தனர். சிலர் உசிலம்பட்டியில் இறங்கி தேனி வந்தனர். சிலர் மதுரைக்கே சென்று விட்டு திரும்ப வந்தனர். இவர்களில் பலரும் ரயிலில் பயணித்தவர்கள் தான். இருப்பினும் எங்கள் ஊருக்கு வரும் ரயிலை நாங்கள் வரவேற்காவிட்டால், யார் வரவேற்பார்கள். நாங்கள் இதனை நாங்கள் கொண்டாடுவதற்கே ரயிலில் பயணித்தோம் எனக்கூறினர்.

மதுரை- தேனி இடையே பஸ் கட்டணம் 70 ரூபாய் வரை உள்ளது. பயண நேரம் ஒரு மணி நேரம் 45 நிமிடமாக உள்ளது. ஆனால் ரயிலில் கட்டணம் 60 ரூபாய் மட்டுமே. ஒரு மணி நேரத்தில் பயணிக்க முடியும். அதுவும் தேனியில் இருந்து ரயிலில் சென்றால், மதுரை நகரின் மத்திய பகுதிக்கே சென்று இறங்கி விடலாம். பஸ்சில் சென்றால், ஆரப்பாளையத்தில் இருந்து மதுரையின் மையப்பகுதியில் உள்ள பெரியார் நிலையம் செல்ல அரை மணி நேரம்வரை ஆகும். இந்த பயண நேரமும் குறைந்துள்ளது இதுவும் மிகுந்த வரவேற்புக்குரிய விஷயம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News