மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-16 11:13 GMT

மதுரை கூட்டு்க்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கூடலுார் லோயர்கேம்ப்பில் முல்லைப்பெரியாற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து அங்கிருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல 1300 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடக்கிறது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும். தவிர திட்டம் தொடங்கும் இடத்தில் நுாறு ஆண்டுகளுக்கு மேல் சலவைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தும் சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கூட்டுக்குடிநீர் திட்டத்தை வைகை அணையில் இருந்து செயல்படுத்த வேண்டும் என சலவைத்தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையினை வலியுறுத்தி ஏற்கனவே முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினரும், பாரதீய கிஷான் விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து இன்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் மதுரை குடிநீர் திட்டத்தை மாற்று வழிகளில் செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர். தங்கள் சமூகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சலவை தொழிலாளர்களும் கலெக்டரிடம் கொடுத்தனர்.

Tags:    

Similar News