வாராகி வாகனத்தில்.. கலக்கி எடுத்த பவன்கல்யாண்..!

நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத மிகப் பெரிய கவனம் பெற்றிருக்கிறார்,பவன்கல்யாண். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற வார்த்தைக்கு நிரூபணமாகி இருக்கிறார்.

Update: 2024-06-11 05:49 GMT

வாராகி வாகனத்தில் பவன்கல்யாண்.

மோடி பவன் கல்யாணை குறிப்பிட்டு பேசும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். நம் தமிழக சட்டபேரவையிலும் இவரை  பேசியிருக்கிறார்கள் என்பதில் தான் விஷயமே தங்கியிருக்கிறது. இந்த இடத்திற்கு அவர் ஒன்றும் சாதாரணமாக வந்து விடவில்லை. பல ரணங்கள் தாங்கி, பல அவமானங்களை கடந்து இந்த அளவிற்கு வந்து தடம் பதித்திருக்கிறார்.

இந்த தேர்தலில் நூற்றுக்கு  நூறு சதவிகிதம் வெற்றி பெற்ற கட்சியில் ஜன சேனாவும் ஒன்று. அவர் பவன் கல்யாண் அதன் தலைவர். பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றது இந்த உயரத்தை தொட.

ஆந்திர மாநிலத்தில் சினிமா வட்டாரத்தில் அவர் பவர் ஸ்டார். அவரது அண்ணன் சிரஞ்சீவி மெகா ஸ்டார். பாரம்பரியமிக்க சினிமா குடும்பம் அவர்களுடையது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக தெலுங்கு பேசும் தேசத்தை கட்டி ஆண்டு வருகிறார்கள்.

சிரஞ்சீவி தான் முதன் முதலில் அரசியல் கட்சி ஆரம்பித்து களம் கண்டவர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மத்திய அரசில் பேருக்கு அங்கம் வகித்து பின்னர் பின்வாங்கிவிட்டார். கட்சியையும் கலைத்து விட்டார். ஆனால் அந்த சமயத்தில் அவர் தம்பி பவன் கல்யாண் தனியே ஜன சேனா என்கிற கட்சியை தொடங்கிய போது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

2014 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஒன்று பட்ட ஆந்திராவை பேசிய முதல் நபராக பவன் கல்யாண் இருந்தார். இஃது பலரது ஏளனத்தை சம்பாதித்தது. இவர் முன்பு போட்டியிட்ட பீமாபுரம் மற்றும் பீதாபுரத்தில் தோல்வியை தழுவியதும், இவரது கட்சி சார்பில் வெற்றி பெற்றவர் அணி மாறியதும்  அனைவரும் அவ்வளவு தான் என்றனர்.

ஆனால் நடந்ததே வேறு. பீதாபுரத்தில் போய் வீடு வாங்கி தங்கினார். அரசியல் மாற்றத்திற்காக உழைக்கின்றேன், அதன் முதல் படியில் இருக்கிறேன். நிச்சயம் வெற்றி கொள்வேன் என்றார். ராணுவத்தினர் பயன்படுத்தும் கனரக வாகனத்தை வாங்கி அதனை தனது பிரசார வாகனமாக பயன்படுத்தி, அதற்கு வாராகி என பெயரிட்டு ஆந்திராவில் வலம் வந்து அசரடித்தார்.

பவன் கல்யாணின் இந்த செயல் ஆந்திராவில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அவர் தனது பேச்சில் சனாதனத்தை தூக்கிப்  பிடித்தார். அதனை இழிவு படுத்தி பேசினால் பிராமணர்கள் மட்டுமே காயப்படமாட்டார்கள். அத்தனை இந்துக்களும் தான் வேதனைப்படுவார்கள் என கர்ஜித்தார்.

இந்த சம காலத்தில் இவர் அளவிற்கு யாரும் தைரியமாக பேச முன் வராததால் இவரது பேச்சு சிறப்பு கவனம் பெற்றது. ஆரம்ப காலங்களில் மோடி அரசின் மீது விமர்சனங்கள் முன் வைத்தவர் பின்னாளில் அவரை பொது மேடைகளில் கொண்டாட ஆரம்பித்தார்.

சந்திரபாபு நாயுடுவுடன் மோடிக்கு இருந்த பிணக்குகளை களைய நடையாய் நடந்தார். கூட்டணிக்குள் கொண்டு வர தனது பிரதான தொகுதிகளை விட்டுக்கொடுத்தார். மிக குறைந்த அளவு தொகுதிகளிலேயே (21 + 2) போட்டியிட்டார். ஆனால் பிரசாரம், பின்னி எடுத்தார். சளைக்காமல் மோடிக்கும் நாயுடுவுக்கும் வாக்கு சேகரித்தார். அசந்து போனார்கள் தெலுங்கு தேசக் கட்சியின் பிரதிநிதிகளே. அவர்களே செய்ய தயங்கிய சமாசாரம் அது.

மனமுவந்து செய்திருக்கிறார் இதனை. அது செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நள்ளிரவு. நந்தியாலத்தில் தங்கி இருந்த சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட தருணம் அது. யாருமே எதிர்பாராத விதமாக முதல் ஆளாக தனது ஆதரவாளர்களுடன் போய் நின்றது பவன் கல்யாண். மொத்த ஆந்திராவும் பிரமித்து நின்ற தருணம். அதுவரைக்கும் பேருக்கு கூட்டணி பற்றி பேசிக் கொண்டு இருப்பதாக நினைத்தவர்களை நிலைகுலையச்  செய்த தருணம் அது.

அந்த நள்ளிரவில் இருபத்தைந்து ஆயிரம் பேர் தங்கள் வாகனங்களில்  அணி திரண்டு வந்து இருக்கிறார்கள். திணறிப்   போனது நிர்வாகம். அத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லை. ஆனால் வெளியே குப்பம் பகுதிகளில் தெலுங்கு தேச கட்சியினர் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து துவம்சம் செய்து இருந்தனர். இவர்களோ கட்டுப்பாடோடு நடந்துக் கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது என்றே சொல்லலாம்.

அன்று இருந்த நிலைமையில் இவர் தனது கட்சியை தெலுங்கு தேசத்தோடு ஒன்றிணைத்து விடுவார் என்றே பலரும் ஆரூடம் சொல்லிக் கொண்டு இருக்க இவர் மாத்திரம் ஜெகனுக்கு எதிராக பின்னணியில் இயங்கிய மிஷனரிகளுக்கு எதிராக மிகவும் தெளிவாக காய் நகர்த்தினார். வீரியமான உத்வேகமான இவரது பிரசார பாணி பலரை குலை நடுங்க செய்தது. அதற்கு பலனும் கொடுத்தது என்பது இந்த தேர்தலில் பட்டவர்த்தனமாக தெரிந்து போயிற்று.

முதல் அடி...

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்தவர்கள் அவர்களாகவே ராஜினாமா செய்ய இவரது சகோதரர் நாகாபாபு அந்த பொறுப்பில் வர இருக்கிறார் என்கிறார்கள்.

கடந்த காலங்களில் பிரமோற்சவ சமயத்தில் சிலுவை வடிவிலான மின் விளக்கு அழிச்சாட்டியங்களை செய்து வந்தவர்களுக்கும்...கிரிப்டோ கிருத்துவர்களாக தேவஸம்போர்டில் பணியில் இருந்து கொண்டு அட்டூழியம் செய்து கொண்டு வருபவர்களை இவரது நியமனம் ஒரு வழி பண்ணும் என நம்பிக்கை பிறந்திருக்கிறது என்கிறார்கள்.

கொரோனாவுக்கு  பின்னான காலத்தில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் லட்டுகள் காணாமல் போனதாக கணக்கு சொல்லி இருப்பதாக சொல்கிறார்கள் என்றால்...இதன் வீரியத்தை  நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

கோயிலை சுற்றிலும் கான்கிரீட் காடுகளாக மாற்றியிருப்பதை, தற்போது பதவிக்கு வருபவர்கள் தான் மாற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருமலையில் ஆழ்வார்களை விடுத்து அன்னமய்யாவை தாங்கி பிடிப்பதாக சொல்லி சிலை வைத்தவர்கள்...

அவர் வாழ்ந்து வந்த வீட்டை இடித்து கழிவறை கட்டி வைத்து அழிச்சாட்டியம் செய்து வருவது என பல குற்றச்சாட்டுக்கள் சுப்பாரெட்டி காலத்தில் எழுந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பவன் கல்யாண் பொறுத்தவரை அவருக்கு ஒன்று பட்ட ஆந்திராவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதிலேயே கண்ணாக இருக்கிறார்.

மொழி வாரி மாநிலங்களாக பிரித்து விட்டு இன்று நிர்வாக காரணங்களுக்காக தெலுங்கு பேசும் மக்களை இரண்டு கூறுகளாக பிரித்து விட்டீர்களே என காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்டு துளைத்தெடுத்து வருகிறார்.

நடைமுறையில் மீண்டும் ஒன்று பட்ட ஆந்திர மாநிலம் சாத்தியமா என்பது கேள்விக்குறியே..... ஆன போதிலும் தன்னால் அதை நிர்வாகத்தால் மீட்டெடுக்க முடியும் என்றும்...., அதனை நோக்கி நகர்ந்து கொண்டே வருவதாக சொல்லி வருகிறார். ஜன சேனா அதனை சாதிக்கும் என்கிறார் அவர். அவரது தீர்க்கமான பார்வை வெல்லட்டும்.

ஜனசேனா கட்சி தலைவராக வாழ்வாங்கு வாழ நாமும் அவரை வாழ்த்தலாம். திரையில் தோன்றி நிஜத்திலும் வெற்றி பெற்று இருக்கிறார் என்பதை விட எந்த இடத்தில் இருந்தாலும் தேசத்தின் மீது நல்லபிமானம் கொண்டவர்கள் தோற்கவே கூடாது என்பதற்காகவே அவரை தாராளமாக வாழ்த்தலாம்.

Tags:    

Similar News