142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்.. ஒரு மணி நேரத்தில் மீண்டும் குறைந்தது…

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் முதல் முறையாக 142 அடியை எட்டியது. இருப்பினும், ஒரு மணி நேரத்தில் மீண்டும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

Update: 2022-12-28 08:10 GMT

முல்லைப்பெரியாறு  அணை நீர் மட்டம் 142அடியை தொட்டதும் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் இந்த ஆண்டு முதன் முறையாக நேற்று 142 அடியை எட்டியது. இதனை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பலர் பென்னி குக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சில இடங்களில் பொங்கல் வைக்கப்பட்டது. பெரியாற்றில் மலர் துாவி மரியாதை செய்தனர்.

அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியதால், கேரளாவில் 3 ஆவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. உடனடியாக பெரியாற்றில் தமிழகப்பகுதி வழியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அணைக்கு விநாடிக்கு 1500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 1900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் மெல்ல சரிந்து 141.90 அடியாக குறைந்தது.

முல்லைப்பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், தற்போது ஐந்தாவது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டி உள்ளது. ஆனால் தொடர்ச்சியாக ஒண்ணரை மாதங்களுக்கு மேல் அணையின் நீர் மட்டம் 136 அடிக்கு மேல் தான் இருந்தது.

அணையில் இவ்வளவு நீர் இருந்தும் முல்லைப் பெரியாற்றின் கடைமடைப் பகுதிகளுக்கு தேவையான தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறக்குமாறு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் பல முறை கோரிக்கை விட்டும் எந்த பலனும் இல்லை என விவசாயிகள் புகார் கூறி உள்ளனர்.

அணை முழுமையாக நிரம்பி வழிந்தாலும் மோசமான நீர் மேலாண்மை காரணமாக இன்னும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன என விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர். இதற்கிடையில் முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட பின்னர், 1924 ஆம் ஆண்டு மற்றும் 1933 ஆம் ஆண்டு, 1940 ஆம் ஆண்டு, 1961 ஆம் ஆண்டு, 1977 ஆம் ஆண்டுகளில் நீர் மட்டம் 152 அடி வரை உயர்ந்தது. 1943 ஆம் ஆண்டு மட்டும் அணையின் நீர்மட்டம் 155 அடியை எட்டியது. இவ்வளவு பலமான முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தற்போது 142 அடி கூட தேக்கவிடாமல் கேரள அரசு தடுத்து நிறுத்தி வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தொடர்ந்து உயர்த்தி நிலைநிறுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கங்கள் கடுமையாக போராடி வருவதால் இந்த அளவாவது பெரியாறு அணை உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News