வருஷநாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் முறைகேடு

தேனி மாவட்டம், வருஷநாடு கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

Update: 2021-09-06 04:45 GMT
தேனி மாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள்.

தேனி மாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், வருஷநாடு கிராம ஊராட்சியில் நுாறு நாள் வேலை உறுதி திட்டப்பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இதில் முறைகேடுகளும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. வெளியூரில் வசிப்பவர்கள் பலர்  நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ததாக கூறி அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு வருகைப்பதிவேடும் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளூரிலேயே வேலைக்கு வராத பலர் வேலைக்கு வந்ததாகவும் வருகை பதிவேட்டில் பதிவு செய்து  முறைகேடு செய்துள்ளனர்.

அதேபோல் வேலை நடக்காத இடங்களிலும் வேலை நடந்ததாக கூறி, அந்த பணிகளை பல நுாறு பேர், பல நாட்கள் வேலை செய்ததாக கூறி பணம் எடுத்துள்ளனர்.

இப்படி பல லட்சம் ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து இங்குள்ள பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

விரிவான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News