அரசு அலுவலகங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுக நடவடிக்கை..!

அரசு அலுவலகங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் கட்டிட அமைப்பில் மாற்றங்கள் செய்யும் பயிற்சியை தேனி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-13 04:38 GMT

தேனி மாவட்ட,மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுக கூடிய வகையில் அரசு அலுவலகங்கள் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுக கூடிய வகையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்கள் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா நேற்று தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில் , அனைத்து மாவட்டங்களிலும் , மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுக கூடிய வகையில் அரசு அலுவலகங்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலகங்கள் இருப்பது தொடர்பாக அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் முதல் மாவட்டமாக தேனி மாவட்டத்தில் இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களுக்கு எளிதில் வந்து செல்லும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கான பயிற்சி ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறளாளிகளுக்கான தேசிய நிறுவனம் (NIEPMD) மூலம் விரிவுரையாளர் மற்றும் மறு வாழ்வு அலுவலரை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-இன் கீழ் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அரசு அலுவலகங்களை அணுகல் (Easy Accessbility) குறித்த பயிற்சியும், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பான முறையில் ஏறும் வகையில் சாய்தளங்கள் இருத்தல், குடிநீர் வசதி, கழிவறை மற்றும் பிற அலுவலகங்கள் செல்வதற்கு ஏதுவாக பெயர் பலகைகள் மற்றும் வரைபடங்கள் அமைத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதைகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், எளிதில் நுழையும் வகையிலான முகப்புகளை வடிவமைத்தல், எளிதில் அணுக கூடிய வகையில் வரவேற்பறை வடிவமைத்தல், மின்தூக்கி(Lift), மின்உயர்த்தி (Elevator) வடிவமைத்தல் போன்ற பல்வேறு வசதிகள் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் அமைப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, NIEPMD விரிவுரையாளர் குறிஞ்சி செல்வன், NIEPMD மறு வாழ்வு அலுவலர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News