தேனி மாவட்டத்திற்கு கிடைத்த 'ஜாக்பாட்'
தற்போது அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதிதாக இரண்டு நான்கு வழிச்சாலைகள் வர உள்ளது.;
தேனி மாவட்டம் மிகச்சிறிய மாவட்டம். முழுக்க விவசாய மாவட்டம். சில பகுதிகளில் மட்டும் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச தரத்தை எட்டி பிடிக்கும் நிலைக்கு உயர்ந்து வருகின்றன. குறிப்பாக ரோடு வசதிகள் மிகவும் நல்ல முறையில் உள்ளன. தற்போது திண்டுக்கல்- குமுளி (லோயர்கேம்ப்) நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. (இந்த ரோடு பணிகள் முதல் கட்டமாக இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது) இன்னும் சில மாதங்களில் இப்பணிகள் முழு அளவில் நிறைவுக்கு வரும் நிலை உள்ளது.
இந்நிலையில் மதுரை-தேனி இடையே அகல ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை வரை நீடிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கான சோதனை ஓட்டமும் நிறைவடைந்து விட்டது. ரயில் இயக்கப்பட்டால் நகர் பகுதி முழுக்க நெரிசலில் தவிக்கும். இதனால் மதுரை ரோட்டிலும், பெரியகுளம் ரோட்டிலும் ரயில்வே லைன் உள்ள இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது. இந்த மேம்பாலங்கள் ரயில்வே லைனில் இருந்து இருபுறமும் தலா 650 மீட்டர் நீளத்திற்கு அமைகின்றன. பெரியகுளம் ரோட்டில் அப்படி அமைக்கப்படும் போது நேரு சிலையை எட்டி விடும். எனவே தேனி மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, கம்பம் ரோட்டை இணைத்து முழு அளவில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு ஆய்வுப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
இப்படி அடுக்கடுக்காக வளர்ச்சி பணிகள் நடந்து வரும் நிலையில் புதிதாக இரண்டு ஜாக்பாட் திட்டங்கள் வருகின்றன. அதில் ஒன்று ராமேஸ்வரம்- கொச்சின் நான்கு வழிச்சாலை. இந்த நான்கு வழிச்சாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வரை பணிகள் நிறைவடைந்து விட்டன. அதேபோல் கொச்சியில் இருந்து பூப்பாறை வரை பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது மதுரை- உசிலம்பட்டி- தேனி- போடி- பூப்பாறை இடையே மட்டும் பாதை அமைக்கப்பட வேண்டும். இந்த பாதை தேனியில் பைபாஸ் ரோடாக நகருக்குள் வராமல் அரண்மனைப்புதுாருக்கும்- கொடுவிலார்பட்டிக்கும் இடையே சத்திரப்பட்டிய ஒட்டிச் சென்று போடி விலக்கில் இணைகிறது. இடையில் முல்லைப்பெரியாற்றை இரண்டு இடங்களிலும், வைகை ஆற்றை ஒரு இடத்திலும் கடக்கிறது. இங்கெல்லாம் பாலம் கட்டப்பட உள்ளது.
அடுத்து கொச்சி- கோட்டயம்- இடுக்கி - ராமக்கல்மெட்டு- தேவாரம்- சங்கராபுரம்- நாகலாபுரம்- டொம்புச்சேரி வழியாக தேனிக்கு ஒரு விரைவுச்சாலை (எக்ஸ்பிரஸ் வே) அமைக்கப்படுகிறது. இதற்கு மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதை அமைக்கப்பட்டு விட்டால் கொச்சியில் இருந்து தேனிக்கு 2 மணி நேரத்தில் பயணித்து விடலாம். தற்போது இந்த திட்டங்களுக்கான ஆய்வுப்பணிகள் நிறைவடைந்து திட்ட அனுமதி கூட கிடைத்து விட்டது என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. எப்படியும் இந்த பாதை, பாலம் பணிகள் முழுக்க 5 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து விடும். இதே காலகட்டத்திற்குள் (அதிகபட்சம் 2 முதல் 3 ஆண்டுகளில்) தேனி மாநகராட்சி அறிவிப்பும் வந்து விடும். இதன் மூலம் தேனியின் வர்த்தகம் பல மடங்கு வளர்ச்சியை எட்டும். வேலை வாய்ப்பு, பொருளாதார சுழற்சி, சொத்து மதிப்பு உயர்வு என பல வழிகளில் தேனி உயரிய பொருளாதார வளர்ச்சியை தொட்டு விடும். உண்மையிலேயே இந்த திட்டங்கள் தேனிக்கு கிடைத்த ஜாக்பாட் தான் என அத்தனை பேரும் ஏற்றுக் கொள்கின்றனர்.