தேனியில் பருத்தி சாகுபடி பரப்பு, விளைச்சல் அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு 5 ஆயிரத்து 895 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-12-02 06:39 GMT

பருத்தி - கோப்புப்படம் 

தேனி மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பரப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டு நல்ல மழைப்பொழிவும் இருந்ததால் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 895 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி எடுப்பு தொடங்கி உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் மான்சான்டோ வீரியரக பருத்தி சாகுபடி செய்துள்ளோம். இதில் பூச்சி தாக்குதல் இல்லை. மழையும் போதுமான அளவு இருந்தது. இதனால் விளைச்சல் அதிகமாக எக்டேருக்கு 20 குவிண்டால் வரை பருத்தி கிடைக்கிறது. ஒரு குவிண்டால் 5500க்கு கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்துள்ளது.

தேனியில் மத்திய அரசின் காட்டன் கார்ப்பரேஷன் இந்தியாவின் கிளை தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் கொள்முதல் தொடங்கப்படவில்லை. இதனால் எடுக்கும் பருத்தியினை விவசாயிகள் வெளிமார்க்கெட்டில் விற்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

வெளிமார்க்கெட்டில் விவசாயிகள் குவிண்டால் 4000 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரையே விலைக்கு கேட்கின்றனர். எனவே எடுத்த பருத்தியை இருப்பு வைக்க முடியாமல் விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் உருவாகி உள்ளது. இந்த நிலை மாறி மத்திய அரசு கொள்முதலை தொடங்கினால் விவசாயிகளுக்கு தேவையான விலை கிடைக்கும். இந்த முறை பருத்தியில் நல்ல விலை கிடைத்தால், அடுத்த ஆண்டு பருத்தி சாகுபடி பரப்பு மாவட்டத்தில் மேலும் அதிகரிக்கும் என்று கூறினர்

Tags:    

Similar News