2021ம் ஆண்டு மட்டும் 414 போலீசார் மற்றும் அதிகாரிகள் இறப்பு : பகீர் தகவல்

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு பணியில் இருந்த போதே இறந்த போலீசார் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 414 ஆக பதிவாகி உள்ளது.

Update: 2022-01-04 15:25 GMT

காவலர் நினைவு தினம் பைல் படம்

கடந்த 2020ம் ஆண்டு தமிழக போலீஸ்துறையில் 337 பேர் பணியில் இருந்த போதே இறந்தனர். 2021ம் ஆண்டு இதன் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 29 பேரும், பிப்ரவரி மாதம் 22 பேரும், மார்ச் மாதம் 27 பேரும், ஏப்ரல் மாதம் 48 பேரும், மே மாதம் 83 பேரும், ஜூன் மாதம் 37 பேரும், ஜூலை மாதம் 26 பேரும், ஆகஸ்ட் மாதம் 25 பேரும், செப்டம்பர் மாதம் 35 பேரும், அக்டோபர் மாதம் 24 பேரும், நவம்பர் மாதம் 25 பேரும், டிசம்பர் மாதம் 33 பேரும் இறந்துள்ளனர்.

இதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளார். இரண்டு பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். 4 பேர் சந்தேக மரணம் அடைந்துள்ளனர். 23 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

40 பேர் தற்கொலை செய்துள்ளனர். 59 பேர் ஹார்ட் அட்டாக்கில் இறந்துள்ளனர். 69 பேர் விபத்தில் இறந்துள்ளனர். 81 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

132 பேர் பல்வேறு உடல் உபாதைகளால் இறந்துள்ளனர். 2020ம் ஆண்டு இறந்தவர்களில் இரண்டு பேர் 2020ம் ஆண்டு கணக்கில் சேர்க்கப்படாமல், 2021ம் ஆண்டு இறந்த கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். எப்படியிருந்தாலும் ஆண்டுதோறும் பணியில் இருக்கும் போதே உயிரிழக்கும் போலீசார் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வரும், போலீஸ் துறை தலைவருமான டி.ஜி.பி., சைலேந்திரபாபுவும் இந்த விஷயத்தில் நேரடியாக கவனம் செலுத்தி, போலீஸ் மரணங்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என போலீசார் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News