தமிழகத்தில் நம்பிக்கை இழக்கும் அரசு மருத்துவமனைகள்

தனியார் மருத்துவமனைகளில் யார் எந்த சிகிச்சை பெற்றாலும் அவர்களுக்கு அரசு முழு மருத்துவ செலவையும் வழங்கும் என்ற நிலை உருவாக வேண்டும்.

Update: 2022-11-20 06:02 GMT

பைல் படம்.

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து உயர்நீதிமன்றம் சில மாதங்களாகவே தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தது. சிகிச்சை முதல் மருந்துகளின் திறன், காலாவதி வரை அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டில் திருப்தியில்லை. விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடையவில்லை என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை உயர்நீதிமன்றமே தெரிவித்தும் அரசு அதனை சரி செய்ய முன்வரவில்லை.

இந்நிலையில் சென்னையில் கல்லூரி மாணவியும் கால்பந்து வீராங்கனையுமான மாணவி பிரியா தவறான சிகிச்சையால் உயிர் இழந்துள்ளார். இது தொடர்பாக இரண்டு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ஒரு 10 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளது  இயல்புதான்.

ஏழை குடும்பத்தில் பிறந்து கல்லூரியில் சேர்ந்து கால்பந்து வீராங்கனையாக உருவாகி வந்த ஒரு மாணவி தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு பின்னர் மரணத்தை தழுவி இருப்பது ஜீரணிக்க முடியாத வேதனையாக உள்ளது .

இந்த செய்தி தமிழகத்தை இன்று உலுக்கினாலும் இதைவிட மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வந்தால் நாம் எளிதில் கடந்து சென்று விடுவோம்.அதே சமயம் அந்த மாணவி பொருளாதார நிலையில் வலுவாக இருந்தால் அரசு மருத்துவமனைகளை நாடி இருக்க மாட்டார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருப்பார். அந்த அளவுக்கு வசதியானவர் இல்லை என்பதால் தான் அரசு மருத்துவமனையை நாடியுள்ளார்.

இன்றைக்கு ஏழை எளியவர்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமென்றால் அரசு மருத்துவமனையை தான் நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அரசு சார்பில் மருத்துவ காப்பீடு திட்டங்கள் இருந்தாலும் கூட அவற்றை தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலும் ஏற்பதில்லை. அப்படியே ஏற்றாலும் அதில் காப்பீடு மூலம் வரும் தொகைக்கு அதிகமாகவே பில் போட்டு கையில் இருந்து பணம் வாங்குகிறார்கள் .

சில காப்பீடு திட்டங்களில் தான் முழுமையும் அதிலிருந்து பணம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த காப்பீடு திட்டங்களுக்கு கட்ட வேண்டிய பிரிமியம் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

ஆண்டுக்கு 20 ஆயிரம் வரை பிரிமியம் கட்டினால் தான் ஒருவர் நல்ல தரமான மருத்துவமனையில் கையில் இருந்து எந்த செலவும் செய்யாமல் சிகிச்சை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது.

அதே சமயம் இந்த நவீன யுகத்திலும் ஒருவர் ஒருவர் நல்ல மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றால், அதற்கு பொருளாதார அந்தஸ்து மட்டுமே தடையாக உள்ளது. நிலையாக இல்லாத பொருளாதாரத்தை ஒரு அளவுகோலாக பார்ப்பதை கைவிட வேண்டும்.

அனைவருக்கும் நவீன மருத்துவ வசதி என்ற லட்சியத்தை நிறைவேற்ற வேண்டுமானால் மருத்துவமனைகள் அனைத்துமே அரசு மருத்துவமனைகளாக மாற வேண்டும். அல்லது தனியார் மருத்துவமனைகளில் யார் எந்த சிகிச்சை பெற்றாலும் அவர்களுக்கு அரசு முழு மருத்துவ செலவையும் வழங்கும் என்ற நிலை உருவாக வேண்டும்.

அதே சமயம் அரசு மருத்துவமனையில் தங்களுக்கு அரசு வேலை கிடைத்து விட்டது மாதம் ஒன்றாம் தேதி ஆனால் ஊதியம் நிச்சயம் வந்து விடும். அதை அப்படியே சேமிப்பில் வைத்துவிட்டு தனியாக தொழில் நடத்தி குடும்பத்தை நடத்தும் மனப்போக்கு தான் அரசு மருத்துவர்கள் பலரிடம் காணப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள் ஏழை எளிய, நடுத்தர வர்க்க நோயாளிகளின் வசதிக்காகவே அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசு மருத்துவர்கள், அங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் ஆகியோருக்கும் அந்த மனநிலை இல்லை. அவர்கள் வசதிக்கு ஏற்ப நோயாளிகள் செயல்பட வேண்டும் என்ற மனப்பான்மை உள்ளது.

மருத்துவமனையில் உள்ளே நுழைந்ததும் சிகிச்சை பெறுவது முதல் அங்கு தங்குவதற்கு கிடைக்கும் வசதிகள் வரை ஊழல் புரையோடி உள்ளது . எத்தனையோ சட்டங்கள், நடைமுறைகள் கொண்டு வரப்பட்டாலும் இது மாறுவதாக இல்லை . இதனை மாற்ற முடியாவிட்டால் பிரியாக்கள் பலியாகிக் கொண்டே தான் இருப்பார்கள். இதனை தடுக்க அரசு மருத்துவமனைகள் இழந்த நம்பகத்தன்மையினை மீட்க வேண்டும்.

Tags:    

Similar News