சொந்த கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சேவை: தேனியில் அசத்தும் டாக்டர்

தேனியை சேர்ந்த டாக்டர் தனது பூர்வீக கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறார்.

Update: 2021-12-20 11:43 GMT

டாக்டர் கமலேஷ் தனது சொந்த கிராமமான எம்.பெருமாள்பட்டியில் இலவச மருத்துவமுகாம் நடத்தினார். அருகில் நின்று இருப்பவர் முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்.

தேனியை சேர்ந்த டாக்டர் கமலேஷ் தனது தந்தை பிறந்த கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வருகிறார்.

தேனியை சேர்ந்தவர் டாக்டர் கமலேஷ். இவர் தற்போது தேனி நலம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சிறப்பு டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை சின்னன் பிறந்த ஊர் சின்னமனுார் அருகே உள்ள எம்.பெருமாள்பட்டி. இந்த கிராமம் தான் டாக்டர் கமலேஷின் முன்னோர்கள் வாழ்ந்த கிராமம். இன்னும் மிகச்சிறிய கிராமமாகவே இருந்து வருகிறது.

இந்த கிராமத்தில் வசித்தவர்களில் முதன் முறையாக டாக்டராக வந்துள்ளவர் கமலேஷ் மட்டுமே. அதுவும் தேனியில் நலம் மருத்துவமனையில் பணிபுரிவதால், தான் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி, ஒரு மருத்துவக் குழுவை அழைத்துச் சென்று கிராம மக்களுக்கு இலவச முகாம் நடத்தி சிகிச்சை அளித்தார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சொத்துப்பாதுகாப்புக்குழு செயலாளர் ஜெயராமன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். எம்.பெருமாள்பட்டி முக்கிய பிரமுகர் குணாபாலன், ஊராட்சி முக்கிய பிரமுகர்கள் இலட்சுமணன், முத்துப்பாண்டி, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். கிராம மக்கள் ஏராளமானோர் முகாமில் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் பெற்றனர்.

மாதம் இருமுறை தனது கிராமத்தில் இலவச முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தனது மக்களுக்கு முடிந்த அளவு சலுகைகளுடன் கூடிய தரமான சிகிச்சை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும்  டாக்டர் கமலேஷ் தெரிவித்தார்.

Tags:    

Similar News