இரண்டு மாதங்களாக குறைந்து போன மழை பொழிவு: வறண்டது மூல வைகை..!

தேனி மாவட்டத்தில் ஓராண்டுக்கு பின்னர் மழை குறைவால் மூல வைகை வறண்டுபோனது

Update: 2021-09-20 08:15 GMT

தேனி மாவட்டத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழையளவு குறைந்ததால் மேகமலையில் உற்பத்தியாகும் மூலவைகை வறண்டு விட்டது.

தேனி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ச்சியாக ஓராண்டை கடந்து தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த மூல வைகை செப்டம்பர் மாதம் வறண்டு விட்டது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழை குறைந்ததே இதற்கு காரணம்.

தேனி மாவட்டத்தில் மூலவைகை வற்றாத நதியாக இருந்து வந்தது. பருவநிலை மாற்றம், சமூக விரோதிகள் வனவளத்தை அழித்தது போன்ற காரணங்களால் வைகை மெல்ல, மெல்ல அழிந்து ஆண்டுக்கு இரண்டு மாதங்களுக்கு தண்ணீர் வருவதே பெரிய அதிசயம் என்ற நிலை ஏற்பட்டது.. கடந்த 4 நான்கு ஆண்டுகளாக மூலவைகை வன வளப்பாதுகாப்பில் வனத்துறை கெடுபிடி காட்டி வருகிறது. இதன் பயனாக மேகமலையில் வனவளம் அதிகரித்து மூல வைகையில் ஓரளவு நீர் வரத் தொடங்கியது.

கடந்த 2019ம் ஆண்டு தொடர்ச்சியாக ஏழு மாதமும், 2020-21ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 12 மாதமும் மூல வைகையில் நீர் வந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பெருக்கெடுத்த வைகையால், தற்போது வரை வைகை அணை நீர் மட்டம் முழு கொள்ளவை எட்டியே உள்ளது.

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேகமலை வனப்பகுதிகளில் மழையளவு குறைந்தது. இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை  தேனி மாவட்டத்தில் சரிவர பெய்யவில்லை. இதனால் மூல வைகை வறண்டுபோனது. இன்னும் ஓரிரு வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மழை கிடைக்கும். அப்போது வைகையில் மீண்டும் வெள்ளம் கரைபுரண்டு வருவதைப் பார்க்கமுடியும்   என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News