கருவாடு கூட வாங்க முடியவில்லையே? விலை உயர்வால் தேனி மக்கள் புலம்பல்

தேனி மார்க்கெட்டில் கருவாடு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கருவாடு வாங்க முடியவில்லையே என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

Update: 2023-11-28 05:58 GMT

கருவாடு - கோப்புப்படம் 

தேனி மாவட்டத்தில் ஆட்டு இறைச்சி கிலோ 1100 ரூபாயினை கடந்துள்ளது. நாட்டுக்கோழி விலை உயிருடன் ஒரு கிலோ 600 ரூபாயினை கடந்துள்ளது. மீன் விலைகளும் 200 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.

ஒரிஜனல் நாட்டுக்கோழி முட்டை விலை ஒரு முட்டை ஒன்றுக்கு 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் அசைவ பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் கருவாடு விலையும் உயர்ந்துள்ளது.

நெய்மீன் கருவாடு தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ 1200 ரூபாய், முதல் 1700 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தரமான நெய்மீன் கருவாடு 100 கிராம் வாங்கினால் 170 ரூபாய் கொடுக்க வேண்டும். பால் நெத்திலி கருவாடு ஒரு கிலோ 700 ரூபாயினை எட்டி உள்ளது. கொள்ளிக்கருவாடு ஒன்றின் விலை 10 ரூபாயினை கடந்துள்ளது. அயிரை குஞ்சு கருவாடு கிலோ 400 ரூபாய், இறால் குஞ்சு கருவாடு கிலோ 400 ரூபாய், என அத்தனை வகை கருவாடுகளும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதனால் தேனி மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இறைச்சி தான் விலை உயர்வால் வாங்கி சாப்பிட முடியவில்லை. கருவாடு விலையும் உயர்ந்துள்ளதால், இதுவும் சாதாரண மக்களுக்கு எட்டாத விலையில் விற்கப்படுகிறது என புலம்பி வருகின்றனர்.

Tags:    

Similar News