கேரளாவில் மீண்டும் கொரோனா: தேனியில் மருத்துவத்துறை அலர்ட்

கேரளாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் இதன் பாதிப்பு தேனி மாவட்டத்தில் வந்து விடக்கூடாது எச்சரிக்கையாக பணியாற்றி வருகின்றனர்.

Update: 2023-12-18 16:37 GMT

கேரளாவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திய பருவமழை தற்போது தான் ஓய்ந்துள்ளது. ஆனால் தேனி உட்பட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை தீவிரமாக பெய்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஏற்கனவே காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இப்போது அடுத்த கட்ட பிரச்னை தொடங்கி உள்ளது.

கேரளாவில் குறிப்பாக தேனி மாவட்டத்தின் எல்லையோரம் உள்ள இடுக்கி மாவட்டம் உள்பட பல பகுதிகளில் டெங்கு, சிக்குன்-குனியா, எலிக்காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் கொரோனாவின் புதிய திரிபும் ஏற்பட்டு வருகிறது. இது எப்போதும் மழைக்காலங்களில் பரவும் காய்ச்சல் தான். தற்போது கொரோனாவும் பரவுகிறது. இப்போது பரவும் கொரோனா ஆபத்தானது இல்லை. இருப்பினும் தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் கேரளாவிற்கு தினமும் வேலைக்கு சென்று விட்டு திரும்புகின்றனர்.

இவர்கள் மூலம்் தேனி மாவட்டத்திலும் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. ஏற்கனவே தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, அம்மச்சியாபுரம், காயமகவுண்டன்பட்டி, கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, உத்தமபாளையம் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.

தற்போது தேனி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் டெங்கு, சிக்குன்குனியா, எலிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது. தவிர கேரளாவில் இந்த வகை காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

எனவே தேனி மாவட்டத்திலும் இந்த பாதிப்புகள் உருவாகும் நிலை உள்ளதால், சுகாதார, மருத்துவத்துறைகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. உள்ளாட்சிகள் மூலம் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கொசு மருந்து தெளிக்கும் பணி, தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தும் பணி, குளோரினேஷன் செய்த குடிநீர் சப்ளை செய்யும் பணி, வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சிகள் இணைந்து இப்பணிகளை செய்து வருகின்றன.

Tags:    

Similar News