பொங்கி வழியும் போர்வெல்கள்.. தேனியில் தான் இந்த அதிசயம்

Ground Water Level -தேனியில் சில பகுதிகளில் உள்ள வீடுகளின் போர்வெல்கள் பொங்கி வழிகின்றன. அந்த அளவு நிலத்தடி நீர் மட்டம் சிறப்பாக உள்ளது.

Update: 2022-10-28 02:46 GMT

நிரம்பிக்காணப்படும் வைகை அணை.

Ground Water Level -தேனியைச் சுற்றிலும் ஒரு புறம் வயல்கள், மறுபுறம் தோட்டங்கள், மூன்று ஆறுகள், ஒரு அணை, நான்கு குளங்கள் உள்ளன. அருகிலேயே மலைப்பகுதிகளும் அமைந்துள்ளன. இதனால் நீர்வளம் நல்ல முறையில் இருக்கும். தேனி நேருசிலை பகுதியில் சில வர்த்தக நிறுவனங்கள் தரைதளத்திற்கு கீழே ஒரு அண்டர் கிரவுண்ட் தளம் அமைத்து சரக்குகளை வைத்துள்ளனர். அந்த அண்டர்கிரவுண்ட் தளத்தில் மழைக்காலங்களில் நீர் ஊற்று தானாக ஊறும்.

அதாவது வெளும் 10 அடி ஆழத்திற்குள் உள்ள அறைகளில் நீர் ஊற்று கிடைக்கும். அந்த அளவு தேனி நகரின் நீர் வளம் நன்றாக இருந்தது. படிப்படியாக நிலத்தடி நீர் மட்டம் சரிந்து தேனி கருப்பு பட்டியலில் சேர்க்கும் அளவுக்கு நிலத்தடி நீர் மட்ட சரிவினை சந்தித்தது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நிலத்தடி நீர் மட்டம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. பழைய டி.வி.எஸ்., ரோடு, என்.ஆர்.டி., நகர், எடமால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் இன்னும் கூட சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் பெய்யும் மழையளவு சிறப்பாக உள்ளது. தேனியை சுற்றிலும் உள்ள வைகை ஆறு, கொட்டகுடி ஆறு, முல்லைப்பெரியாறுகளில் (தேனியில் மூன்று ஆறுகளும் சந்திக்கின்றன) ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருந்து வருகிறது. தேனி மீறுசமுத்திரம் கண்மாய் எப்போதும் நிரம்பி வழிகிறது. தேனி நகருக்குள் செல்லும் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பில் சிக்கி சாக்கடையாக மாறினாலும், அந்த சாக்கடைக்குள்ளும் நீர் வரத்து இருக்கத்தான் செய்கிறது.

கடந்த மாதம் தேனியில் பெய்த மழையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வெளியேற்ற முடியாத மழைநீர் சிறிது, சிறிதாக நிலத்திற்குள் இறங்கியது. இதன் விளைவு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. சோலைமலை அய்யனார் கோயில், நியூஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள சில வீடுகளில் போர்வெல்கள் நிரம்பி தானாக நீர் வெளியேறுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் தான் கொட்டகுடி ஆறும், முல்லைப்பெரியாறும் ஒன்று சேருகிறது.

அதேபோல் தேனியில் எங்குமே நிலத்தடி நீர் மட்டம் சரிந்து பிரச்னை ஏற்படவில்லை. தற்போதைய நிலையில் நிலத்தடி நீர் மட்டம் தேனி நகர் பகுதியை பொறுத்தவரை மிகவும் சிறப்பாகவே உள்ளது. வைகை அணை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நிரம்பிய நிலையில் உள்ளது. வைகை அணை நிரம்பினால் சுமார் 10 கி.மீ., சுற்றளவு பகுதியில் நீர் தேங்கி நிற்கும். இதன் மூலம் அணையில் இருந்து சுமார் 15 முதல் 20 கி.மீ., தொலைவில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சிறப்பாகவே இருக்கும். தேனியில் கலெக்டர் அலுவலகத்தினை அடுத்துள்ள குன்னுார் வரை வைகை ஆற்றில் வைகை அணை நீர் தேங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News