தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு புற்றுநோய் பாதிக்கும் அபாயம் குறைவு

Breast Cancer Awareness -தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிக்கும் அபாயம் குறைகிறது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Update: 2022-10-28 02:40 GMT

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் நடந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் டாக்டர் உடையப்பன் பேசினார்.

Breast Cancer Awareness -தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மகளிர் நலம் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர் வனிதாருக்மணி தலைமை வகித்தார். டாக்டர் தினேஷ் வரவேற்றார். புற்றுநோய் அறுவை சிகிச்சை சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர் கே.உடையப்பன், டாக்டர்கள் கோமதி, கீர்த்தனா உட்பட பலர் பங்கேற்றனர்.

டாக்டர் உடையப்பன் பேசுகையில், மனிதர்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. இதனால் வயதாகும் போது பல்வேறு உடல்நலப்பிரச்னைகள் வரும். அதில் புற்று நோயும் ஒன்று. குறிப்பாக உடலில் ஏற்படும் பல்வேறு மரபணு மாற்றங்களும், ஹார்மோன் மாற்றங்களும் புற்றுநோய்க்கு காரணமாக அமைகின்றன. மார்பக புற்றுநோயினை பொறுத்தவரை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மிகவும் எளிதில் சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம்.

பெண்கள் 40 வயது வரை தனது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 40 முதல் 50 வயது வரை தங்களுக்கு தெரிந்த செவிலியர்களிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். 50 வயதுக்கு மேல் குறிப்பிட்ட கால இடைவெளியில் எக்ஸ்ரே பரிசோதனை போன்றவைகள் செய்து கொள்ளலாம். மார்பகங்களில் கட்டிகள் இருந்தாலோ, காம்புகளில் இருந்து ஒருவித திரவம் வழிந்தாலோ, மார்பக தோல்களில் சிறிய அளவிலான மாற்றங்கள் தெரிந்தாலோ உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசிக்க வேண்டும். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளது. குறைந்தபட்சம் ஒரு தாய் குழந்தை பெற்ற பின்னர் தங்களது குழந்தைக்கு தொடர்ச்சியாக 2 ஆண்டாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் உடல் நலத்திற்கும் நல்லது செய்ய முடியும். குழந்தைக்கும் மிகவும் நல்ல உணவாக அமையும்.

மிகவும் இளம் வயதிலேயே பருவமடைதல், பீரியட் காலங்களில் தேவையில்லாமல் எழும் மாற்றங்களை உடனடியாக கவனித்தால் இது போன்ற பல பிரச்னைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும். புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆலோசனை கூற முன்வருவார்கள். அந்த ஆலோசனைகளை கேட்டு கண்டபடி சிகிச்சை பெறுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். 'ஏற்கனவே குணமடைந்தவர்களின் அனுபவங்களை பெற்று அதன் வழியில் நடப்பது என்று முடிவு எடுக்க கூடாது'. குணமடைந்தவர்களுக்கு அவர்களது அனுபவம் மட்டுமே உண்டு.

ஆனால் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பல நுாறு நோயாளிகளை குணப்படுத்திய அனுபவம் உண்டு. படிப்பறிவு உண்டு. இன்றை சூழலில் உருவாகி வரும் மருத்துவ வசதிகள் குறித்த அறிவுகள் உண்டு. டாக்டர் தினமும் தனது அனுபவத்தையும், அறிவினையும் வளர்த்துக் கொண்டே இருப்பார். இதனால் டாக்டர்களின் அறிவுரையினை முழுமையாக பின்பற்றுவது மிகவும் அவசியம் ஆகும். இவ்வாறு பேசினார்.

கருத்தரங்கில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவுரைகள் அடங்கிய படிவங்கள் வழங்கப்பட்டன.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News