தேனி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது பாட்டில் விற்பனை படுஜோர்

அரசு கொடுத்து வரும் கடும் நெருக்கடிகள் காரணமாக கஞ்சா வியாபாரிகள் பலரும் தற்காலிகமாக மதுபாட்டில் விற்பனைக்கு மாறி விட்டனர்.

Update: 2022-05-01 10:00 GMT

கஞ்சா விற்ற வழக்கில் கைதானால் அவர்களின் சொத்துக்கள் மட்டுமின்றி, அவர்களின் நெருங்கிய ரத்த உறவினர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என அரசு கிடுக்கிப்பிடி போட்டது. அதேபோல் கஞ்சா வழக்கில் கைதான பலரின் சொத்துக்களை பறிமுதல் செய்தது. இந்த செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. தவிர மாநிலம் முழுவதும் பல முக்கிய கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் குறித்தும் ரகசிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான கஞ்சா வியாபாரிகள் தற்காலிகமாக மதுபாட்டில் விற்பனைக்கு மாறியுள்ளனர். ஏற்கனவே தேனி மாவட்டத்தில் பல நுாறு பேர் அனுமதியற்ற மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா வியாபாரிகளும் தற்காலிகமாக மதுபாட்டில் விற்பனைக்கு மாறியதால், தேனி மாவட்டத்தில் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அனுமதியற்ற மதுபாட்டில் வாங்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

குறிப்பாக கம்பம், கூடலுார், புதுப்பட்டி, உத்தமபாளையம் பகுதியில் இன்று மே முதல் தேதியை முன்னிட்டு காலை 5 மணி முதலே அனுமதியற்ற மதுபாட்டில் விற்பனை களைகட்டி வருகிறது. இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த போலீஸ் நிர்வாகம் கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News