யூடியூப்பில் அவதூறு பாடல் நீக்க தேனி மாவட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு

முல்லைப்பெரியாறு அணை பற்றி அவதுாறு பரப்பும் வகையில் கேரள யூடியூப் சேனல்களில் ஒலிபரப்பாகும் பாடல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2022-08-09 09:13 GMT

தேனி மாவட்ட கலெக்டரிடம் விவசாய சங்க தலைவர்கள் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்ட பாரதீய கிஷான் சங்க தலைவர் சதீஸ்பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், பொருளாளர் ஜெயபால், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயலாளர் சிவனாண்டி, துணைத்தலைவர் ராஜா உட்பட பலர் தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரனை சந்தித்தனர்.

கேரளாவில் ஒரு தனியார் யூடியூப் சேனலில் முல்லைப்பெரியாறு அணை பற்றி அவதூறு பரப்பும் வகையிலான 3 நிமிட பாடல் ஒலிபரப்பி வருகின்றனர். 13 பேர் இந்த பாடலை தயாரித்துள்ளனர். இந்த பாடலில் முல்லைப்பெரியாறு அணை பற்றி பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏதும் அறியாத அப்பாவி மக்களை அச்சப்படுத்தி, அவர்களை முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக திசை திருப்ப வேண்டும் என்பதே இவர்களின் இலக்கு ஆகும்.

தேனி கலெக்டர் தமிழக அரசு மூலம் இந்த விஷயத்தில் தலையிட்டு அவதுாறு பாடலை நிறுத்த வேண்டும். இந்த பாடல் தயாரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். கேரளாவில் ஒலிபரப்பபட்டு வரும் இந்த அவதூறு பாடலை நிறுத்தாவிட்டால், தமிழகத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என மனு கொடுத்த விவசாயிகள் அனைவரும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News