மாநகராட்சியாகுமா தேனி? முதல்வருக்கு பா.ஜ.க கோரிக்கை

நலத்திட்ட உதவிகள் வழங்க தேனிக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், தேனியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என பா.ஜ. மனு அளித்துள்ளது.

Update: 2022-04-29 10:13 GMT

தேனி மாவட்ட பா.ஜ., வர்த்தக அணித்தலைவர் சிவக்குமரன்.

முதல்வர் ஸ்டாலின் நாளை காலை தேனியில் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்நிலையில் தேனி வரும் தமிழக முதல்வருக்கு தேனி மாவட்ட பா.ஜ., வர்த்தக அணி தலைவர் சிவக்குமரன் மனு அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: தேனியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். மீறுசமுத்திரம் கண்மாயினை சுற்றுலாதலமாக அறிவித்து, சீரமைப்பு பணிகள் செய்து, படகு போக்குவரத்து தொடங்க வேண்டும்.

புதிதாக ரோடு போடும் போது, முன்பு போடப்பட்ட பழைய ரோட்டை தோண்டி எடுத்த பின்னர் புதிய ரோடு அமைக்க வேண்டும். தேனியில் எங்கு திரும்பினாலும் டாஸ்மாக் கடைகளாக உள்ளது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையினை குறைத்து, யோகா மையம், உடற்பயிற்சி கூடம், பூங்காக்கள் அமைக்க வேண்டும்.

தேனியில் ஒரு பூங்கா கூட இல்லை. நீரோடை கால்வாய்கள், வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையோர பூங்காங்கள் அமைக்க வேண்டும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை தேனியில் அமைக்க வேண்டும்.

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் சொத்துவரி அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுரை ரோட்டையும், கம்பம் ரோட்டையும் இணைத்து பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News