வனத்தில் தீ பரவல் தடுக்க தேனி வனத்துறையினர் உறுதி..!

தமிழ்நாடு வனத்துறை தேனி வனச்சரகம் சார்பாக காட்டுத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டம் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2024-02-10 11:55 GMT

தேனி பூதிப்புரத்தை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதிகள்.

தேனி பூதிபுரத்தில் விழிப்புணர்வு  முகாம் மற்றும் நாடகம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் தற்போது முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் நமது மலைப்பகுதியில் காலநிலை மாற்றத்தாலும் வறட்சியினாலும் ஓடைகள் மற்றும் ஆறுகள் நீர்வரத்து இன்றி குறுகி வருகிறது.

மேலும் போதுமான மழை இல்லாததால் காடுகளில் மரம் செடி கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளது. கோடை காலங்களில் காட்டுத் தீ பரவாமல் இருக்க வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் சாலைகளில் செல்லும் பொழுது புகைப்பிடிப்பது எளிதில் தீப்பற்ற கூடிய பொருள்களை அப்படியே விட்டு செல்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

வனப்பகுதிக்கு அருகில் உள்ள பட்டா நிலங்களில் தீ வைப்பவர்கள், முன்னதாகவே வனத்துறை அனுமதி பெற்று தீ வைக்க வேண்டும். வனத்துறையோடு இணைந்து பொதுமக்களும் காட்டுத்தீ உருவாக்காமல் இருக்க துணை நிற்க வேண்டும். காட்டு தீ பற்றி தகவல் தெரிவித்தவுடன் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் இந்த நெறிமுறைகளை மீறி செய்பவர் மீது 1882 ஆம் வருடம் தமிழ்நாடு வனச் சட்டப் பிரிவு 21 ஏ மற்றும் பி படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காடுகளில் வசிக்கும் பறவைகள் தேனீ, பொன்வண்டு, சிட்டுக்குருவி, பச்சைக் கிளிகள், வவ்வால் ஆகியவைகள் அழிந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மழை பெய்வது நமக்கு தாமதமாகிறது. ஆகவே வனங்களை காத்து மழையைப் பெருக்க வேண்டும் என விழிப்புணர்வு நாடகம் மூலம் விளக்கப்பட்டது.

இதில் தேனி வனச்சகர் செந்தில்குமார், கெப்பரெங்கன் பட்டி கிராம வனக்குழு தலைவர் முருகன், தேனி பாரஸ்ட் ஆனந்த பிரபு, தேனி வன காப்பாளர்கள் விக்னேஷ், காளி ரத்தினம் மற்றும் பூதிப்புரம் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News