கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகும் தக்காளி: விவசாயிகள் கண்ணீர்

கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை அதல பாதாளத்தில் சரிந்தது. விலை கூடினாலும், குறைந்தாலும் விவசாயிகளுக்கு மிஞ்சுவது என்னவோ கண்ணீர் மட்டுமே

Update: 2023-08-25 08:27 GMT

தேனியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி 

‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்பார்கள். கம்பராமாயண காலம், சிலப்பதிகார காலம், மகாபாரத காலம், திருவள்ளுவர் காலம் என நாமும் பல்வேறு காலங்களை பற்றி படித்திருக்கிறோம். சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலம் தவிர்த்து வேறு எங்குமே விவசாயிகளை பற்றிய குறிப்புகள் பெரிய அளவில் இல்லை.

விவசாயம் செய்தவர்கள் நல்ல முறையில் வாழ்ந்ததாகவும் வலுவான தகவல்கள் இல்லை. ஆனால் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் மிகவும் நன்றாக வாழ்ந்ததாக சில தகவல்கள் உள்ளன. கம்பராமாயணத்தில் கூட பயிர்களின் செழிப்பு பற்றிய குறிப்புகள் தான் உள்ளன. ஆனால் விவசாயிகள் பற்றிய குறிப்புகள் இல்லை.

இது பற்றி இப்போது குறிப்பிடக்காரணம், விவசாயம் இல்லாமல் யாருமே வாழ முடியாது என்றாலும், விவசாயிகள் எக்காலத்திலும் நன்றாக வாழ்ந்தது இல்லை என்பதை போன்ற சில எதிர்மறையான தோற்றங்கள் தான் இதுவரை பதிவாகி வந்துள்ளன.

அதுவும் இப்போதைய காலத்தில் விவசாயம் முழுக்க கமிஷன் புரோக்கர்களின் பிடியில் சிக்கி விட்டது. இதனை மீட்க முயன்ற மோடியே தோற்று விட்டார். ஆமாம் மோடியின் ஆட்சிக்காலத்தில் அவர் தோற்றது விவசாய புரோக்கர்களிடம் மட்டும் தான். 

கடந்த நான்கு மாதங்களாக தக்காளி விளைச்சல் இல்லை. இதனால் அதிக விலை இருந்தது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து விட்டது. ஆனால் விலை இல்லை. தேனி வெளிச்சந்தையில் ஒரு கிலோ முதல்ரக தக்காளி கிலோ 20 ரூபாய்.

காலை 6 மணிக்கு 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி காலை 10 மணிக்கு மேல் 10 ரூபாய் ஆக குறைந்து விட்டது. மாலையில் வந்த வரை லாபம் என நினைத்து கொடுப்பதை கொடுங்கள் என விவசாயிகள் விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. காரணம் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் புதிய தக்காளி பெட்டிகள் வந்து விடும். அதனை விற்க வேண்டும்.

எனவே அதற்குள் முதல்நாள் பறித்த தக்காளிகளை விற்று அழிக்க வேண்டும். எனவே தான் நேரம் செல்ல செல்ல தக்காளி விலை கடுமையாக வீழ்கிறது. தேனியில் இன்று காலை 10 மணிக்கு சில பலசரக்கு கடைகளில் கூட சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் என விற்றனர்.

சில்லறை மார்க்கெட் விலையே 10 ரூபாய் என்றால், மொத்த மார்க்கெட் விலை என்னவாகயிருக்கும். விவசாயிக்கு என்ன விலை கொடுத்திருப்பார்கள்.

இதனால் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கிட்டத்தட்ட கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விவசாய விளை பொருட்களை பாதுகாக்கவும், உரிய விலை கிடைக்கவும், குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News