ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு கவனம் செலுத்துமா

கேரளாவிற்கு ரேஷன் அரிசி பெருமளவில் கடத்தப்படுவதை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுகொள்ளவில்லை என புகார்

Update: 2023-12-16 08:45 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து பலர் அரிசி கொள்முதல் செய்து, மில்களில் கொடுத்து கூடுதல் பாலீஸ் ஏற்றி கேரளாவிற்கு விநியோகம் செய்கின்றனர். கேரளாவி்ல் மூணாறு, பூப்பாறை, தேவிகுளம், வண்டிப்பெரியார், குமுளி பகுதிகளில் உள்ள எஸ்டேட்களில் வசிக்கும் மக்கள் இந்த அரிசியை கிலோ 30 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த அரிசி இலவசமாக வழங்கப்பட்டாலும், இதனை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. கேரளாவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சிவப்பு மட்டை ரக அரிசி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தை போல் கேரளாவிலும் சில்லறை மார்க்கெட்டில் அரிசி விலை அதிகரித்துள்ளது.

இதனால் கேரள எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் ரேஷன் அரிசியை விரும்பி வாங்குகின்றனர். இதனால் கடத்தல் தொழில் தடையின்றி நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். போலீசாருக்கு அரிசி விற்பனை செய்பவர்களையும்் தெரியும், கடத்திச் செல்பவர்களையும் தெரியும், அரிசி பட்டை தீட்டப்படும் மில்களின் விவரமும் தெரியும். ஆனாலும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News