சுறா மீனை நழுவ விட்ட எடப்பாடி..! பாமக பறிபோன கதை..!

பாமக கட்சியை அதிமுக கோட்டை விட்டது எப்படி என சில பிரத்யேக தகவல்கள் கிடைக்கின்றன.

Update: 2024-03-15 05:24 GMT

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)

அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் என்பது போல உருவான தோற்றம் சட்டென்று உடைந்து, பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்கிறது பாமக.

அதிமுக கூட்டணிக்குள் பாமகவை இழுக்க, முன்னாள் அமைச்சர் சண்முகத்தை தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. முதல் சந்திப்பிலேயே, 15 லோக்சபா + 1 ராஜ்யசபா என சொன்னார் ராமதாஸ். இந்த டீலிங்கை எடப்பாடி ஏற்கவில்லை.

தொடக்கமே குழப்பம்:

தொடந்து நடத்த மறைமுகப் பேச்சுவார்த்தையில், 5+1 அல்லது 8 லோக்சபா என்பதை எடப்பாடி முன்னிறுத்தினார். மேலும் தேர்தல் செலவுகளுக்கு பாமக தரப்பிடம் நேரடியாக பணம் தரப்படாது. அதிமுகவே பார்த்துக் கொள்ளும் என சொல்லப்பட்டது. இதில் ராமதாஸ் முரண்பட்டார். இதனை அடுத்து, தேர்தல் செலவுகளுக்கான தொகையை நேரடியாக பாமகவிடம் தருவதாக உறுதி தரப்பட்டது. இந்த கண்டிசன் ஓ.கே. ஆன நிலையில், சீட் ஷேரிங் தொடங்கியது.

கட்சிக்காரர்களும் இதனை ஏற்க மாட்டார்கள். அதனால், ராஜ்யசபாவை கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் என எடப்பாடி தெளிவாக சொல்லியிருக்கிறார். இதனை பிராக்ட்டிகலாக உணர்ந்த ராமதாஸ், அப்படியானால் 9 லோக்சபா சீட் தாருங்கள் ; சட்டமன்ற தேர்தலில் 40 இடங்கள் பாமகவுக்கு தர வேண்டும். இதற்கு இப்போதே ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். பாமகவின் இந்த எதிர்பார்ப்பை எடப்பாடியிடம் சொல்ல, தலையை இடது வலதாக ஆட்டி ஸ்ட்ரிக்டாக மறுத்தார், எடப்பாடி.

மறுத்த எடப்பாடி :

சட்டமன்ற தேர்தலில் 40 இடங்கள் அதுவும் இப்போதே உடன்பாடு என்பதைக் கேட்டு எடப்பாடியும் சீனியர்களும் உடன்பட மறுத்தனர். அதேசமயம், சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி தொடரும் என ஒப்பந்தம் போட ரெடி . ஆனால், எண்ணிக்கையை இப்போதே முடிவு செய்து ஒப்பந்தம் போட முடியாது என்று கூறி அதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதன் பிறகு பாமக தரப்பிடமிருந்து பதில் வரவில்லை. அதிமுகவும் கவலைப்படவில்லை. இதனால் தான் அதிமுக-பாமக கூட்டணி உருவாகவில்லை என்கிறார்கள் அதிமுகவினர். இந்த நிலையில், பாஜக-பாமக கூட்டணி இறுதி செய்யப்படவிருக்கிறது என்கிற தகவல்களை அடுத்து, சட்டமன்ற தேர்தலுக்குமான இடங்களுக்கும் இப்போதே ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். அதிமுகவுக்கு வாருங்கள் என நேற்று ராமதாசிடம் சண்முகத்தை பேச வைத்திருக்கிறார் எடப்பாடி.

ஆனால், எந்த கட்சியுடன் கூட்டணி என்கிற முடிவை அன்புமணியிடம் விட்டு விட்டேன். அவர் பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்யவிருக்கிறார். நீங்கள், வாய்ப்பை மறுத்து விட்டு இப்போது கூப்பிட்டால் எப்படி? என்று சண்முகத்திடம் ஆதங்கப்பட்டுள்ளார் ராமதாஸ். வலைக்குள் வந்து சிக்கிய சுறா மீனை நழுவவிட்டு விட்டார் எடப்பாடி என்கிறார்கள் கட்சியினர்.

Tags:    

Similar News