இரண்டு மாதங்களுக்கு பின்னர் சுருளிஅருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி
தேனி மாவட்டம், கம்பம் சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள், பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது;
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த இரண்டு மாதங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளிக்க வனத்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில் மகாளய அம்மாவாசையை முன்னிட்டு இன்று காலை பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
அருவியில் குளித்து விட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்தனர். அருவியில் வெள்ளப்பெருக்கு குறைவாக இருந்ததால் இவர்களை குளிக்க வனத்துறை அனுமதித்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் குளித்து விட்டு, இங்குள்ள பூதநாராயணன், சிவன், அம்மன், விநாயகர் கோயில்களில் வழிபாடு நடத்தி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதே போல் கும்பக்கரை அருவி, சின்னசுருளி அருவி, போடி அணைக்கரைப்பட்டி அணையிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.