பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய அ.தி.மு.க, நகர செயலாளர்..!

சின்னமனுார் அ.தி.மு.க., நகர செயலாளர் பிச்சைக்கனி (38) தன் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.

Update: 2024-09-29 05:04 GMT

கோப்பு படம் 


வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய சின்னமனூர் நகர அதிமுக செயலாளரை போலீஸார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி (38). அதிமுக நகரச் செயலாளரான இவரது வீடு மற்றும் கட்சி அலுவலகம் உத்தமபாளையம் சாலையில் உள்ளது. கடந்த 24-ம் தேதி தனது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக பிச்சைக்கனி போலீஸில் புகார் கொடுத்தார்.

அதில், தனக்கும் சின்னமனூர் 13-வது வார்டு அதிமுக உறுப்பினர் உமாராணி மற்றும் அவரது மகன் வெங்கடேசனுக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாகவும், அவர்கள் தான் பெட்ரோல் குண்டுவீசியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி

வீட்டில் இருந்த 6 கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் இருவரும், ஆட்டோவில் சிலரும் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது தெரிய வந்தது. இவர்கள் பிச்சைக்கனி தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது.

இதையடுத்து, அவரது ஆதரவாளர்களான வீட்டுக் காவலாளி மாரியப்பன், முத்துவேல், செல்வராஜ், பிரகாஷ் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். இதையறிந்த பிச்சைக்கனி தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "சில வாரங்களுக்கு முன்பு எதிர்தரப்பைச் சேர்ந்த வெங்கடேசனைத் தாக்கியது, அவரது கார் கண்ணாடியை உடைத்துச் சேதப்படுத்தியது தொடர்பாக பிச்சைக்கனி மீது 2 வழக்குகள் பதிவாகின. இதையடுத்து, தனது வீட்டின் மீது தானே பெட்ரோல் குண்டுகளை வீச ஏற்பாடு செய்து, எதிர்தரப்பு மீது பழிபோட்டுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தியதில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதன்பேரில் பிச்சைக்கனி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்து, 4 பேரைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.

Tags:    

Similar News