பா.ஜ.க.,- அ.தி.மு.க., இடையே வெடித்தது பகிரங்க மோதல்

பா.ஜ.க.,- அ.தி.மு.க., இடையே பகிரங்க மோதல் வெடித்தது.

Update: 2024-03-16 03:30 GMT

எடப்பாடி பழனிசாமியை அரைவேக்காடு என்று கூறி அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரமாக முயன்று வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வந்தது.

2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல பாஜக முயன்று வந்தது. அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேட்டி அளித்தார். தேசிய அளவில் பாஜக லோக்சபா தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே பாஜக கருதுகிறது, இருந்தாலும் தென்னிந்தியாவில் வலுவாக கால் பதிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் வேண்டும் என்பதில் பாஜக தீர்க்கமாக இருக்கிறது. அதற்கு அதிமுக தயவு தேவை. 2024ல் கூட்டணி இருந்தால் தான் , 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியை தொடர முடியும். தென்னிந்தியாவில் பாஜக வலுவாக இல்லை என்ற விமர்சனத்தை சரி செய்ய அதிமுகவின் தேவை இருக்கும் என்பதால் பாஜக இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.

அதிமுகவை சமாதானம் செய்து பாஜக சார்பாக கோவையை சேர்ந்த ஆன்மீக குரு ஒருவர் களமிறக்கப்பட்டு பேச்சு வார்த்தைகளை செய்தார். இரண்டு கட்சிக்கும் நெருக்கமாக இருக்கும் அந்த சாமியார் மூலம் மீண்டும் அதிமுகவை பாஜகவிற்குள் இழுக்கும் பணிகள் நடந்து வந்தது. திரைமறைவில் இந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

காட்டமான மோதல்: இப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் பூராவும் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது அதிமுக ஆட்சியில் தான்." எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை பதிலடி: எல்லையோர மாநிலங்களில் எந்தளவுக்கு போதைப்பொருட்களை பிடிக்கிறார்கள் என்பது தான் அவர்களது திறமை. முன்னாள் முதலமைச்சர் இதனை புரிந்துகொள்ள வேண்டும். அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது. இவரெல்லாம் முதலமைச்சராக பொறுப்பில் இருந்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை, என்று அண்ணாமலை காட்டமாக பேசி இருந்தார்.

அதிமுகவினர் அட்டாக்: எடப்பாடி பழனிசாமியை அரைவேக்காடு என்று கூறி அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அதிமுக ஐடி விங் சார்பாக அரவக்குறிச்சி அரவேக்காடு என்ற டேக் தற்போது இணையத்தில் டிரெண்ட் செய்யப்படுகிறது. அண்ணாமலையை கடுமையாக தாக்கி டிரெண்டு செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில் அதிமுக - பாஜக இடையிலான மோதலும் உச்சம் தொட்டுள்ளது.

Tags:    

Similar News