முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாக 95 லட்சம் பேரிடம் கையெழுத்து: விவசாயிகள் முடிவு
95 lakh signatures in support of Mullaiperiaru dam
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் 'சேவ் கேரளா' என்ற அமைப்பினை தொடங்கி வழக்கறிஞர் ரசல்ஜோய் என்பவர் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி வருகிறார். முல்லைப்பெரியாற்றில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் வசிக்கும் மக்களிடம் கூட அவர் நேரடியாக பேசி, பெரியாறு அணை உடைந்தால் நம் குழந்தைகளை தண்ணீர் அடித்துக் கொண்டு போய் விடும் எனக்கூறி மக்களை அச்சுறுத்தி வருகிறார். கேரள மக்களிடம் முல்லைப்பெரியாறு அணை பற்றி பொய்யான தகவல்களை சேவ் கேரளா அமைப்பு பரப்பி வருகிறது. இதனை தமிழக, கேரள அரசுகள் வேடிக்கை பார்த்து வருகின்றன.
எனவே, இதற்கு பதிலடி தரும் விதமாக, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 95 லட்சம் மக்களிடம் பெரியாறு அணைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்க உள்ளோம். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரடியாக களத்தில் இறங்கி மக்களிடம் பெரியாறு அணை பற்றிய உண்மைகளை விளக்கி, கையெழுத்து வாங்க உள்ளோம். இன்னும் 15 நாட்களுக்குள் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கி விடும்.லோயர் கேம்ப்பில் தொடங்கி, ஐந்து மாவட்டங்கள் வழியாக சென்று ராமநாதபுரம் பெரிய அரண்மனை வரை கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.