மதுக்கூரில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம்

மதுக்கூரில் பயிர் காப்பீடு பாலிசி வழங்கும் திட்டம் குறித்த ‘நமது பாலிசி நமது கையில்’ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-04 10:56 GMT

மதுக்கூரில் நடைபெற்ற ‘நமது பாலிசி நமது கையில்’ விழிப்புணர்வு முகாமில் விவசாயிகளுக்கு மாதிரி பாலிசி ரசீது வழங்கப்பட்டது.

பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு பாலிசி வழங்கும் திட்டம் குறித்த 'நமது பாலிசி நமது கையில்' விழிப்புணர்வு முகாம் மதுக்கூரில் நடைபெற்றது. 

விவசாயிகளுக்கான பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இதுவரை விவசாயிகள் ஒவ்வொரு பருவத்திலும் நெல், உளுந்து, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு அவர்கள் சாகுபடி செய்யும் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கி பாஸ் புத்தக நகலுடன் பொது சேவை மையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது அரசு வங்கிகளிலோ காப்பீட்டுத் தொகையை செலுத்திவந்தனர்.

பொது சேவை மையத்தில் விவசாயிகள் காரிப் அல்லது ரபி பயிர் காப்பீடு செய்த பின் பதிவேற்றம் செய்த விவரங்கள் அடையாள எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. தற்போது அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்த விபரங்களை பாலிசி ரசீதாக அவர்களுடைய வீடுகளிலேயே அவர்கள் கைகளிலேயே கிடைக்கும் வகையில் ஏப்ரல் 2022 முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விழிப்புணர்வு முகாம் பட்டுக்கோட்டை தாலுக்கா அக்ரி இன்சூரன்ஸ் கம்பெனி ஒருங்கிணைப்பு அதிகாரி மணி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பு அலுவலர்கள் சரண் மற்றும் ராம்குமார் மூலம் மதுரபாஷினி புரம் புளியங்குடி, ஒலையகுன்னம், கீழக்குறிச்சி, நெம்மேலி அண்டமி ஆகிய கிராமங்களில் ஊராட்சி மன்ற தலைவர்களிடமும் 'நமது பாலிசி நமது கையில்' குறித்த துண்டு பிரசுரம் வழங்கி நடத்தப்பட்டது.

மேலும் விழிப்புணர்வுக்காக துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய மாதிரி பாலிசி ரசீதும் வழங்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விவசாயிகளிடம் இனிவரும் காலங்களில் 'நமது பாலிசி நமது கையில்' திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்த அனைத்து விபரங்களையும் தங்களுடைய வீடுகளில் தங்களுடைய கைகளிலேயே காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் நேரடியாகப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் வங்கி கணக்கு நகல் ஆதார் எண்களில் தவறுகள் மற்றும் காப்பீடு செய்த கிராமங்களில் மாறுதல் போன்றவைகளினால் ஏற்படும் காலதாமதங்களை ஆரம்பக்கட்டத்திலேயே தவிர்த்திட வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்த பயிருக்கான பாலிசியை அவரவர் வசம் வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. காலதாமதமும் இனி தவிர்க்கப்படும் என தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை தாலுகா அக்ரி இன்சூரன்ஸ் கம்பெனி ஒருங்கிணைப்பு அதிகாரி மணி திட்டத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

Tags:    

Similar News