மதுக்கூரில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள்: வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு

மதுக்கூரில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-11-23 04:46 GMT

மதுக்கூரில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்ட வேளாண் துணை இயக்குனர் சுஜாதா.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துகளில், மாநில அரசின் நிதி உதவியுடன் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் குழுவாக இயற்கை இடுபொருள் தயாரிக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கிட திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அத்திவெட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தென்னை இயற்கை விவசாயிகள் குழுவின் செயல்பாடுகளை தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுஜாதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது அத்திவெட்டி தென்னை விவசாயிகள் குழு தலைவர் வைரவ மூர்த்தி, செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் குழு உறுப்பினர்கள் ஹிட்லர், நல்லதம்பி, நல்ல சிவம் மற்றும் மணி உள்ளிட்டோரிடம் குழுவின் மூலம் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் இயற்கை இடுபொருள்களான அமுத கரைசல் ஜீவாமிர்த கரைசல் மீன் அமினோ அமிலம் மூலிகை பூச்சி விரட்டி போரான் கரைசல் மற்றும் இயற்கை களைக்கொல்லி தயாரிப்பு போன்றவை குறித்து அத்திவெட்டி கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்து இயற்கை விவசாய குழுவினரின் தயாரிப்புகளையும் பார்வையிட்டார்.

குழு உறுப்பினர்கள் செயற்கை உரம் விடுதலை தவிர்த்து இயற்கை உரங்களை தயார் செய்து இயற்கை பயிர் ஊக்கிகளை பயன்படுத்தி தற்சார்பு முறையில் செயல்படவும், தயாரிப்பினை அதிகப்படுத்தி வட்டார அளவில் மாவட்ட அளவில் பிற விவசாயிகளுக்கும் அதனை விற்பனை செய்து பயன்பெறவும் பொருளாதார ரீதியாக முன்னேறிடவும் கேட்டுக்கொண்டார்.

ஆய்வுக்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் இளங்கோ துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் செய்திருந்தனர். மேலும் வேளாண் துணை இயக்குனர் சுஜாதா மதுக்கூர் வேளாண் விரிவாக்கம் மையத்தையும் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு காலத்தை உளுந்து கடலை விதைகளை தொழில்நுட்பங்களை கூறி வழங்கிட வேளாண் உதவி அலுவலர்களை கேட்டுக்கொண்டார். பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கூறினார்.

Tags:    

Similar News