திருப்பத்தூர் மீன் சந்தையில் ரசாயனம் தடவிய மீன் விற்பனை: அதிகாரிகள் திடீர் சோதனை

இச்சோதனையில், ரசாயனம் தடவப்பட்ட 20 கிலோவிற்கும் மேற்பட்ட மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது

Update: 2022-01-22 08:30 GMT

 ரசாயனம் தடவிய மீன் விற்கப்படுவதாக வந்த புகாரின்பேரில் திருப்பத்தூர் மீன் சந்தையில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

திருப்பத்தூர் மீன் சந்தையில் ரசாயனம் தடவிய மீன் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மிகப்பெரிய அளவில் மீன் மொத்த விற்பனை சந்தை இயங்கிவருகிறது. நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே இயங்கும் சந்தைக்கு, கேரளா, தூத்துக்குடி,ராமேஸ்வரம் போன்ற மீன் பிடி துறைமுகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.

இந்நிலையில், திருப்பத்தூர் மீன் சந்தையில் மீன்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க உபயோகப்படுத்தப்படும் ரசாயன கலவை பயன்படுத்தி மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அதிகாரி தியாகராஜனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து இன்று மீன் சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையில், பேரூராட்சி ஊழியர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில், ரசாயனம் தடவப்பட்ட 20 கிலோவிற்கும் மேற்பட்ட மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதனை பறிமுதல் செய்து கிருமி நாசினி கொண்டு அழிக்கப்பட்டது.

பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, 30 ற்கும் மேற்பட்ட மொத்த மீன் விற்பனை கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 6 கடைகள் மட்டுமே மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News